Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் 33 மாநிலங்கள்.. கையெழுத்திட மறுக்கும் 3 மாநிலங்கள்.. மத்திய அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்டத்தில் 33 மாநிலங்களில் 12 ஆயிரத்து 505 பள்ளிகள் சேர்க்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. அவற்றில் 1,314 தொடக்கப்பள்ளிகள், 3,149 நடுநிலைப்பள்ளிகள், 2,858 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 5,184 மேல்நிலைப்பள்ளிகள் ஆகும். இதில் கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் இன்னும் கையெழுத்திடவில்லை..

பிஎம் ஸ்ரீ பள்ளிகள் புதிய கல்விக்கொள்கை 2020ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. பி.எம். ஸ்கூல்ஸ் ஆஃப் ரைசிங் இந்தியா என்பதன் சுருக்கமே பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் ஆகும். இந்தியா முழுவதிலும் 14,500 பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்துவதே பிஎம் ஸ்ரீ திட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இப்பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக மாற்றி, அப்பள்ளிகள் அவற்றுக்கு அருகிலுள்ள பள்ளிகளை வழிநடத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்த பிஎம் ஸ்ரீ பள்ளிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

PM Shri Scheme to include 12 505 schools in 33 states 3 states including Tamil Nadu refuse to join

இந்த பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டன. எனினும் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்டத்தை மிழ்நாடு அரசு ஏற்கவில்லை.. இதனால் நிதி உதவியை மத்திய அரசு நிறுத்தி வைத்துவிட்டது. அதேபோல் கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டாலும் பி.எம்.ஸ்ரீ. திட்டத்தை ஏற்கவில்லை..தமிழ்நாட்டை பொறுத்தவரை பி.எம்.ஸ்ரீ. திட்டத்தின் பலவற்றை ஆதரித்த போதிலும், மும்மொழி கொள்கை ஏற்க மறுத்து திட்டத்தில் கையெழுத்திட முடியாது என்று கூறிவருகிறது..

இதற்கிடையே நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பஜ்ரங் மனோகர் சன்வான் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி ஆகியோர் பி.எம்.ஸ்ரீ. திட்டம் பற்றி கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் கேட்கும் போது, "அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பி.எம்.ஸ்ரீ. திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனவா?", அந்த திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நிதி போன்ற விவரங்களை கேட்டார்கள்.

இதற்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறியுள்ளதாவது: பி.எம்.ஸ்ரீ. திட்டத்தை செயல்படுத்துவதற்காக கேந்திரிய வித்யாலயா, நவோதயா மற்றும் என்.சி.இ.ஆர்.டி. ஆகியவற்றுடன் இணைந்து மொத்தம் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பள்ளிக்கல்வி, எழுத்தறிவுத்துறை ஆகியவையும், கல்வி அமைச்சகமும் கையெழுத்திட்டுள்ளன. இதில் கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் இப்போது வரை கையெழுத்திடவில்லை.

ஏற்கனவே உள்ள பள்ளிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. 33 மாநிலங்கள் மற்றும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, என்.சி.இ.ஆர்.டி.யில் மொத்தம் 12,505 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 1,314 தொடக்கப்பள்ளிகள், 3,149 நடுநிலைப்பள்ளிகள், 2,858 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 5,184 மேல்நிலைப்பள்ளிகள் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்துள்ளன.

பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்படும் பள்ளிகளை பொறுத்தவரை, சொந்த கட்டிடத்தில் இருக்க வேண்டும், பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், பள்ளி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை போன்றவற்றை நிறைவு செய்திருக்க வேண்டும் என்பன போன்ற விதிகளின் அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்துவதே பி.எம்.ஸ்ரீ. திட்டத்தின் நோக்கம் ஆகும். இது அறிவாற்றல் வளர்ச்சி என்று மட்டுமல்லாமல், 21-ம் நூற்றாண்டின் முக்கிய திறன்களைக் கொண்ட முழுமையான மற்றும் நல்ல நிலையில் மாணவர்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் மாணவர்களை அவர்களின் கற்றல் செயல்பாட்டில் தீவிரமாக ஈடுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது" இவ்வாறு எழுத்து பூர்வமான பதிலில் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி கூறினார்.

மேலும் நாடு முழுவதும் மட்டுமின்றி, மாநில வாரியாக பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளின் எண்ணிக்கை விவரமும், நிதியாண்டு வாரியான நிதி விவரமும் தனியாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி வெளியிட்டிருந்தார். அதில் 2024-2025-ம் ஆண்டு ரூ.5691.48 கோடி நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இதில் மத்திய அரசின் பங்கு ரூ.3757.89 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+