"காப்பாத்துங்கனு போலீஸ் கெஞ்சுனாங்க.." கொல்கத்தா மருத்துவமனையில் வெடித்த வன்முறை! நர்ஸ் திக்திக்
கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவமனையில் நடந்த பலாத்காரத்தை கண்டித்து அங்கே நடந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. மருத்துவமனை உள்ளே புகுந்து போராட்டக்காரர்கள் கண்ணில் பட்டதை அடித்து நொறுக்கினர். இதற்கிடையே நேற்றைய தினம் வன்முறையின் போது மருத்துவமனையில் எந்தளவுக்கு நிலைமை கையைவிட்டுச் செல்லும் அளவுக்கு இருந்தது என்பதை அங்கிருந்த செவிலியர் ஒருவர் விளக்கியுள்ளார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள RG Kar மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக.9ம் தேதி நாட்டை உலுக்கும் பலாத்கார சம்பவம் அரங்கேறியது.

பலாத்காரம்: அங்கே இரண்டாம் ஆண்டு முதுகலை பயிற்சி மருத்துவரான பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.. அன்றைய தினம் அந்த 31 வயதான அந்த பெண் மருத்துவர் தனது ஜூனியர்களுடன் இரவு உணவு சாப்பிட்டுள்ளார். பிறகு அதிகாலை 2 மணியளவில் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க அவர் செமினார் ஹால் சென்றுள்ளார். அப்போது தான் அவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் 33 வயதான சஞ்சோய் ராய் என்பவரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். அதேநேரம் இதில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. எனவே, இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அங்கே தீவிர போராட்டங்கள் நடந்து வருகிறது. அதன்படி நேற்று இரவு நடந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. மருத்துவமனைக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தான் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
செவிலியர்: இதற்கிடையே அந்த வன்முறை தாக்குதல்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு நள்ளிரவில் நர்சுகள் மற்றும் போலீசார் அதிகாரிகளைப் பல நூறு போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் நிலைமை கையை மீறிச் செல்லும் அளவுக்குச் சென்றுள்ளது. இதனால் அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அங்குப் பாதுகாப்பிற்கு மருத்துவமனையில் இருந்த செவிலியர்களிடம் தஞ்சம் புகுந்துள்ளனர். குழப்பம் மிகவும் தீவிரமாக இருந்தது. அங்கிருந்த போலீசாரை விட போராட்டக்காரர்கள் பல மடங்கு அதிகமாக இருந்ததாக அப்போது மருத்துவமனையில் இருந்த நர்ஸ் கூறியிருக்கிறார்.
என்ன நடந்தது: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நள்ளிரவில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. போலீசாரை விட போராட்டக்காரர்கள் அதிகளவில் திரண்டுவிட்டனர். இதனால் ஒரு கட்டத்தில் போலீசார் எங்களிடம் பாதுகாப்பு கோரினர். உங்கள் வார்டில் நாங்கள் ஒளிந்து கொள்கிறோம் என்று இரண்டு போலீசார் அதிகாரிகள் கூறினர்.
இந்த பலாத்கார சம்பவம் நடந்த செமினார் ஹாலை நோக்கியே போராட்டகாரர்கள் குவிந்தனர். அந்த செமினார் ஹாலில் நுழையவே அவர்கள் விரும்பினர். அதுதான் அவர்களின் இலக்காக இருந்தது. அவர்கள் குற்றம் நடந்த மூன்றாவது மாடிக்குச் செல்ல முயன்றனர். ஆனால், அங்கே செல்ல முடியாததால் இரண்டாவது மாடியில் இருந்த எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிவிட்டனர்.
அச்சம்: போராட்டக்காரர்கள் இப்படி திடீரென நுழைந்து ரகளை செய்தது பயங்கரமாக இருந்தது. நாங்கள் தரைதளத்திற்குச் சென்ற போது உடன் பணியாற்றும் செவிலியர்கள் அச்சத்தில் உறைந்து போய் இருந்தார்கள். எங்கு தங்கள் மீது தாக்குதல் நடத்துவார்களோ என்று அழுக ஆரம்பித்துவிட்டனர். நாங்கள் அனைவரும் அழுதுகொண்டே வளாகத்தை விட்டு வெளியேறினோம். இது எங்களுக்கு ஒரு பயங்கரமான அனுபவம். நேற்று இருந்த சூழலில் எப்போது வேண்டுமானாலும் நாங்கள் கொல்லப்படலாம் என்ற நிலையே இருந்தது" என்றார்.
போராட்டக்காரர்களின் இந்த செயலை கண்டித்தும் மருத்துவமனைக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மருத்துவமனை ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனைக்குள் இதுபோன்ற நடவடிக்கையை ஏற்க முடியாது என்றும் மருத்துவமனை வளாகத்திற்குப் பாதுகாப்பு தேவை என்றும் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications