”எங்களை கொலைவெறியோடு அடிச்சாங்க.. மோடி அரசை நாடு மன்னிக்காது” - பொங்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்
டெல்லி: சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் தாக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா குற்றம்சாட்டி இருக்கிறார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு நிதி வழங்கியது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை இருவரையும் விசாரிக்க சம்மன் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் இன்று ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜராக உள்ள நிலையில் இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்ட போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது டெல்லி போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டெல்லி துக்ளக் சாலை காவல் நிலையத்துக்கு புகார் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த நிலையில் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு இருக்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது டெல்லி போலீஸ் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள அவர், "காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், நாடாளுமன்ற உறுப்பினர் சக்தி சிங் உள்ளிட்டோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. காங்கிரஸ் தொண்டர்களும் தாக்கப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். ஜனநாயகத்தை காலில்போட்டு மிதித்து இருக்கின்றனர். மோடி அரசை இந்த நாடு மன்னிக்காது." என்று தெரிவித்துள்ளார்.
மூன்றரை மணி நேரம் விசாரணை முடிந்த கையோடு.. மருத்துவமனை விரைந்த ராகுல்! சோனியாவிடம் நலம் விசாரித்தார்