கண் பார்வையில்லைன்னா.. எதுக்காக போராட்டத்துக்கு வந்தே? ஜேஎன்யூ மாணவன் மீது போலீஸ் தடியடி
Recommended Video
டெல்லி: பார்வையற்றவர்னா ஏன் போராட்டத்துக்கு வந்தே என ஜேஎன்யூ போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவனிடம் கேட்டு விடாமல் லத்தியால் தாக்கிய போலீஸாருக்கு கண்டனங்கள் குவிகின்றன.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டணங்கள் 300 சதவீதம் உயர்த்தப்பட்டன. மேலும் போராட்டங்களை முன்னெடுக்கும் மாணவ அமைப்புகளின் தலைவர்களுக்கான அபராதத் தொகையும் மிக கடுமையாக அதிகரிக்கப்பட்டது.
இவற்றை திரும்ப பெற கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சப்தர்ஜங் சமாதி பகுதியில் கூடியிருந்த மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

பேரணி
அப்போது நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல மாணவர்கள் முயற்சி செய்ததால் நாடாளுமன்றம் , டெல்லி மெட்ரோ நிலையங்களின் நுழைவு வாயில் மற்றும் வெளியே வரும் வாயில்களை போலீஸார் மூடினர். இந்த நிலையில் திங்கள்கிழமை போலீஸார் தடியடி நடத்திய போது சஷி பூஷன் பாண்டே என்ற பார்வையற்ற மாணவன் மீது தாக்குதல் நடத்தியதாக அந்த மாணவன் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.

நண்பர்கள்
ஜேஎன்யூ மாணவர்கள் அமைப்பினர் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த மாணவன் தன் புகாரில் கூறுகையில் மாணவர்களை போலீஸார் கலைத்து கொண்டிருந்த போது சிலர் என்னிடம் தெருவிளக்குகள் அணைக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் சில நண்பர்கள் என்னை சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக அழைத்து செல்ல முற்பட்டனர்.

கண்ணாடி
அனைவருமே நான் பாதுகாப்பாகத்தான் இருக்கிறேன் என நம்பினர். ஆனால் அது நடக்கவில்லை. என்னை லத்தியால் போலீஸார் அடித்தனர். அப்போது நான் பார்வையற்ற மாணவன் என கூறினேன். போலீஸார் நம்பவில்லை. பிறகு எனது கண்ணாடிகளை கழற்றி காண்பித்தேன்.

மாணவர்
அப்போது ஒரு போலீஸ்காரர், நீ பார்வையற்றவர் என்றால் எதற்காக போராட்டத்தில் கலந்து கொண்டாய் என கேட்டார். மேலும் என்னை விடாமல் அடித்தனர் என்றார். இதையடுத்து அந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பார்வையற்றவர்
போலீஸாரின் இந்த செயலை ஜேஎன்யூ பார்வையற்ற மாணவர்களின் கூட்டமைப்பினரும் தேசிய பார்வையற்றவர்களுக்கான உரிமை அமைப்பும் கண்டித்துள்ளன. பார்வையற்றவர் என தெரிந்தும் அவர் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications