சைதை துரைசாமி மகன் வெற்றி எங்கே? மனித மூளையின் டிஎன்ஏ பரிசோதனை முடிவு எப்போது?
டெல்லி: சைதை துரைசாமியின் மகனை 4 நாட்களாக தேடி வந்த நிலையில் அவரது புகைப்படத்தை உள்ளூர் மக்களிடம் போலீஸார் கொடுத்துள்ளனர்.
சென்னை மாநகாட்சி மேயராக இருந்தவர் சைதை துரைசாமி. இவருடைய மகன் வெற்றி (45). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. தனது தந்தை நடத்தி வரும் மனிதநேய ஐஏஎஸ் பயிற்சி மையத்தை கவனித்து வருகிறார்.

மேலும் சினிமா படங்களையும் அவர் இயக்கி வருகிறார். இவர் த்ரில்லர் படம் ஒன்றை இயக்க முடிவு செய்திருந்தார். இதற்காக சிம்லா, லடாக் பகுதிகளில் லொகேஷன் பார்ப்பதற்காக தனது உதவியாளர் கோபிநாத்துடன் சென்றிருந்தார்.
கடந்த பிப் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சட்லஜ் ஆற்றின் மேல் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக வாடகை காரில் வெற்றியும், கோபிநாத்தும் சென்றுக் கொண்டிருந்தனர். காரை டென்சின் இயக்கினார். இந்த நிலையில் கார் ஓட்டுநர் டென்சினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கார் தாறுமாறாக ஓடியது.
உடனே அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது. தகவலறிந்த போலீஸார், தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் சென்றனர். அங்கு காரை மீட்ட போது அதில் டென்சின் உயிரிழந்திருந்தார். அது போல் அங்கிருந்த கற்கள் மீது விழுந்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
சட்லஜ் ஆற்றில் மாயமான வெற்றியை தேடும் பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் இரு நாட்கள் காத்திருக்குமாறு பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுத்தால் ரூ 1 கோடி வழங்குவதாக சைதை துரைசாமி தெரிவித்திருந்தார்.
மாயமான வெற்றியை கண்டுபிடிக்க இந்திய கடற்படையின் உதவியை கின்னூர் மாவட்ட நிர்வாகம் நாடியுள்ளது. இதையடுத்து சென்னை அடையார் கடற்படை தளத்திலிருந்து சிறப்பு பயிற்சி பெற்ற கடற்படை வீரர்கள் இமாச்சல் விரைந்தனர். கார் விழுந்த இடத்தில் கடற்படையும் விமான படையும் தேடி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் சட்லஜ் நதியில் பாறை இடுக்கில் இருந்து மனித மூளை கிடைத்துள்ளது. இது வெற்றியினுடையதாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். அந்த மனித உறுப்பு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது போல் சட்லஜ் நதியில் கவிழ்ந்த காருக்குள் இருந்து வெற்றியின் ஐஃபோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இமாச்சலில் மோசமான வானிலை காரணமாக வெற்றியை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவர்கள் வந்த கார் 200 அடி உயரத்திலிருந்து உருண்டு ஆற்றுக்குள் விழுந்தது. வெற்றியை 4 நாட்களாக தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வெற்றியின் புகைப்படத்தை உள்ளூர் மக்களிடம் போலீஸார் கொடுத்துள்ளனர்.
அது போல் பாறை இடுக்குகளில் எல்லாம் வெற்றியை தேடும் பணிகள் நடக்கின்றன. இதனிடையே விபத்து நடைபெறுவதற்கு முன்னர் ஹோட்டலுக்கு வெற்றியும் கோபிநாத்தும் சென்ற சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனிடையே பாறை இடுக்கில் கிடைத்த மனித மூளையின் டிஎன்ஏ முடிவுகளுக்காகவும் போலீஸார் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications