"வியூவ்சை அதிகரிக்க" பைக்கில் 300 கி.மீ வேகம்.. சாகசம் செய்ய முயன்று உயிரை விட்ட பிரபல யூடியூபர்!
டெல்லி: பைக்கில் சாகசத்தில் ஈடுபட்டு யூடியூபில் பதிவிடுவதற்காக பிரபல யூடியூபர் அக்சயா சவுகான் என்பவர் சாலையில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இதில் விபத்தில் சிக்கிய அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தற்போதைய இணைய உலகில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடுதான் அதிகரித்து உள்ளது. பொதுமக்கள் பலரும் ஸ்மார்ட் போன்களில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் உலா வருவதை காண முடிகிறது. பேருந்து, ரயில் பயணங்களில் கூட எதிரில் வரும் பயணிகள் முகத்தை கூட பார்க்காமல் குனிந்த தலை நிமிராமல் பயணிகள் செல்வதை காண முடிகிறது.

சமூக வலைத்தளங்களில் குறிப்பாக யூடியூப் வீடியோ தளத்தைதான் அதிகம் பேர் பார்க்கிறார்கள் எனலாம். யூடியூப்களை பொறுத்தவாரை யார் வேண்டும் என்றாலும் வீடியோ போட முடியும். ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும்... இப்படி போடப்படும் வீடியோக்களில் பார்வையாளர்களுக்கு ஏற்ப யூடியூப் நிறுவனம் பணமும் கொடுக்கிறது.
இதனால், பலரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்டு பெருமளவு வருமானமும் ஈட்டுகின்றனர். திரைப்படங்களுக்கு ரிவியூ சொல்வதில் தொடங்கி ஆம்னி பஸ்களுக்கு ரிவியூ வரை கொடுக்கும் யூடியூபர்கள் நிரம்பி கிடக்கிறார்கள். அதேபோல், பைக்குகளில் சாகசங்களை நிகழ்த்தி அந்த வீடியோவை பதிவிட்டு யூடியூப்களில் பல லட்சம் சப்ஸ்கிரைபர்கள் கொண்ட யூடியூப்கர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் அக்சயா சவுகான் என்பவர் யூடியூப்பில் மிகவும் பிரபலமானவர். பைக்குகளில் அதிவேகமாக செல்வது.. தொலை தூர டிரிப் செல்வது என இவர் இந்தியில் பல வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இவருக்கு யூடியூப்பில் சுமார் 12 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இந்தநிலையில், டெல்லி - யமுனை எக்ஸ்பிரஸ் வே சாலையில், தனது கவாஸ்கி நின்ஜா பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
பைக்கில் 300 கி.மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்று அதிவேகமாக பைக்கில் ஓட்டிச்சென்று இருக்கிறார். அப்போது சாலையின் நடுவே இருந்த டிவைடரில் அதிவேகத்தில் பைக் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அகஸ்த்யா சவுகான் பலத்த காயம் அடைந்தார். ஹெல்மெட் அணிந்து இருந்தும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய சவுகான் சில நிமிடங்களில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சவுகானின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ப்ரோ ரைடர் என்ற யூடியூப் சேனலில் பல வீடியோக்களை சவுகான் அதிவேகத்தில் பைக் ஓட்டி பதிவிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், தான் பைக்கில் செல்லும் போதே விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கிறார். இளைஞர்கள் சாலைகளில் சாகசங்கள் செய்யக்கூடாது என்றும் வேகம் விவேகம் அல்ல என்றும் அறிவுறுத்தியுள்ள போலீசார், சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே பைக்குகளை இயக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications