அதிர்ச்சி ரிப்போர்ட்! இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கருவுறுதல் விகிதம் குறைவாம்.. என்ன காரணம்?
டெல்லி: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கருவுறுதல் விகிதம் (pregnancy rate) குறைவாக இருப்பதாக தேசிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருவுறுதல் விகிதம் குறைவதால் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தமிழகத்தில் குறைவாக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கருவுறுதல் திடீரென சரிவதற்கு என்ன காரணம் என ஆய்வு செய்து அதை சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7 குழந்தைகள் கூட சர்வசாதாரணம்..
கடந்த காலங்களில் குழந்தையில்லா தம்பதிகளை நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். திருமணமாகி ஒரே ஆண்டில் பெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது அன்றைய காலக்கட்டங்களில் மிகவும் சாதாரணமாக இருந்தது. 1960, 70-களில் பெரும்பாலான தம்பதியினர் 5 முதல் 7 குழந்தைகள் வரை பெற்றெடுத்தனர். ஏன்.. 10 குழந்தைகளை கூட பெற்ற தம்பதிகள் இருந்தனர். இயற்கை உணவு, உடல் உழைப்புடன் கூடிய வாழ்க்கை முறை, நல்ல ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அன்றைய காலங்கட்டங்களில் குழந்தை பேறு அதிகரிக்க காரணமாக இருந்தது.

ஒன்று இரண்டு போதுமே..
ஆனால், காலம் செல்ல செல்ல இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வால் அதிக அளவில் குழந்தைகள் பெறுவதை மக்கள் நிறுத்தத் தொடங்கினர். இந்த செயல்பாடுகள் 1980, 90-களில் தொடங்கியது. மக்களை தேடி தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் இந்த மாற்றம் உருவானது. இதனால் இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கம் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. அது சமூகத்துக்கு நன்மை பயப்பதாகவும் இருந்தது.

அபூர்வமான குழந்தைப் பேறு
குழந்தைகளை அதிக அளவில் பெற்றெடுத்த காலம் மலையேறி, தற்போது குழந்தை பேறு என்பதையே வரமாக பார்க்கக்கூடிய காலம் வந்துவிட்டது. குழந்தையில்லா தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றம், பணிச்சுமை, மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்று கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது.

தமிழகத்தில்தான் குறைவு...
இந்நிலையில், தேசிய அளவிலான கருவுறுதல் விகிதத்தை இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கருவுறுதல் விகிதம் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்த கருவுறுதல் விகிதம் 1.4 சதவீதமாக உள்ளது. இது கடந்த 2011-ம் ஆண்டில் 1.8 சதவீதமாக இருந்தது.
தமிழ்நாடுக்கு அடுத்தப்படியாக கேரளாவில் கருவுறுதல் விகிதம் குறைவாக இருக்கிறது. அங்கு கருவுறுதல் விகிதம் 1.5 சதவீதமாக இருக்கிறது.

பிற மாநிலங்களை எதிர்பார்க்க நேரும்...
அதேபோல, 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் தமிழகத்தில்தான் குறைவாக இருக்கிறது. மேலும், கேரளாவுக்கு அடுத்தபடியாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவ்வாறு கருவுறுதல் விகிதம் சரிந்து வந்தால், மனித வளங்களுக்கு (Human Resources) பீகார், உத்தரபிரேதசம் போன்ற மாநிலங்களையே தமிழகம் எதிர்பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications