ஃபுல் பவர்.. மாநிலங்களின் அதிகாரத்தை உறுதிசெய்த ஓபிசி சட்டம்.. ஜனாதிபதி ஒப்புதல்..அரசிதழில் வெளியீடு
ஓபிசி சட்டதிருத்தம் அரசாணையில் வெளியிடப்பட்டது
டெல்லி: ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.. இதையடுத்து, 127வது சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டது.
மகாராஷ்டிராவில் மராத்தா என்ற பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அந்த மாநிலம் கொண்டு வந்தது.. ஆனால், இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.. விவகாரம் கோர்ட்டுக்கு போனது..
வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட், இடஒதுக்கீட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்டோருக்கான அதாவது ஓபிசி பட்டியலை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று கடந்த மாதம் தீர்ப்பு கூறியிருந்தது.

இடஒதுக்கீடு
இது தொடர்பாக ஆஜராகியிருந்த மத்திய அரசோ, மாநில அரசுகளுக்கு இந்த அதிகாரம் இருப்பதாக சொன்னது.. இருந்தாலும், மராத்தா பிரிவு மக்களுக்கான இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட் ரத்துசெய்தது... இப்படிப்பட்ட சமயத்தில்தான், இட ஒதுக்கீட்டுக்கான ஓபிசி பட்டியலை மாநில, யூனியன் பிரதேச அரசுகளே முடிவு செய்வதற்கான அதிகாரத்தை அளிக்கும் 127வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை, சில தினங்களுக்கு முன்பு, நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசு நிறைவேற்றியது...

பிரச்சனை
இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த புதன்கிழமை ஒப்புதல் தந்த நிலையில், மத்திய அரசின் அரசிதழிலும் இச்சட்டம் வெளியிடப்பட்டுள்ளது. நடந்து முடிந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் திரண்டு பெகாசஸ் விவகாரத்துக்கு பிரச்சனை செய்தாலும், இந்த மசோதா விஷயத்தில் மட்டும் ஒன்றுகூடி நிறைவேற்றியது கவனிக்கத்தக்கது.

பட்டியல்
அதேபோல, இந்த சட்டத்தின்படி பிரிவு 342ஏ-ல் இடம்பெற்றிருக்கும் மத்திய பட்டியல் என்பது மத்திய அரசு சார்பில் தயாரிக்கப்படும் மத்திய அரசுக்கான சமூக, பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியல் என்ற விளக்கம் சேர்க்கப்பட்டிருக்கிறது.. இதைதவிர, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களுக்கான சமூக பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலை தாங்களே தயாரித்து கொள்ளலாம்.. ஆனால், அது மத்திய ஓபிசி பட்டியலிலிருந்து மாறுபட்டதாகவும் இருக்கலாம் என்றும் அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரையறை
மேலும், சட்டப்பிரிவு 336(26சி)-ல் இடம்பெற்றிருக்கும் சமூக, பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று தெரிவித்திருப்பதும், மத்திய அரசு அல்லது மாநில அரசு யூனியன் பிரதேசங்களின் பயன்பாட்டுக்கான சட்டப்பிரிவு 342-ன்கீழான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அடிப்படையிலேயே இனி கருதப்படும் என்பதையும் அந்த மசோதா வரையறுக்கிறது.












Click it and Unblock the Notifications