4 நாள் பயணமாக உ.பி செல்லும் குடியரசு தலைவர்.. அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தை பார்வையிடுகிறார்
டெல்லி: நான்கு நாள் பயணமாக அயோத்தி செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்யவுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஜூன் மாத இறுதியில் ரயில் மூலம் உத்தர பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொண்டார். கடந்த 2006இல் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ரயில் மூலம் டேராடூன் சென்றிருந்தார்.

குடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர் 15 ஆண்டுகளுக்குப் பின் ரயில் பயணம் மேற்கொண்டது அதுவே முதல்முறையாகும். இந்நிலையில், நான்கு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் நாளை மீண்டும் உத்தரப் பிரதேசம் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26 மற்றும் ஆகஸ்ட் 27 ஆகிய தேதிகளில் உத்தரப் பிரதேசத்திலுள்ள லக்னோ செல்லும் குடியரசுத் தலைவர் அங்கு இரண்டு பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொள்கிறார். மேலும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் டாக்டர் சம்பூர்ணானந்தின் சிலையைத் திறந்து வைக்கிறார்.
ஆகஸ்ட் 28ஆம் தேதி கோரக்பூர் உபி அரசின் சில திட்டங்களைத் தொடங்கி வைக்கும் அவர், ஆகஸ்ட் 29ஆம் தேதி சிறப்பு ரயில் மூலம் அயோத்தி செல்கிறார். அங்குக் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளையும் அவர் பார்வையிடுகிறார்.

மேலும், அயோத்தி ராம் கதா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ராமாயண மேளாவையும் அவர் தொடங்கி வைக்கிறார். இது தவிர ஜென்மாஸ்டமியை முன்னிட்டு அயோத்தி ராம் லல்லா கோயிலில் குடியரசுத் தலைவர் வழிபாடு நடத்துகிறார்.
இதுவரை குடியரசுத் தலைவர்களாக இருந்தவர்கள் பொதுவாக இதுபோன்ற மத ரீதியிலான வழிபாடுகளில் பங்கேற்க மாட்டார்கள். ஆனால் தற்போது முதல்முறையாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இதுபோன்ற வழிபாடுகளில் பங்கேற்கிறார்.












Click it and Unblock the Notifications