புதிய குடியரசு தலைவர் ஆகிறார் திரௌபதி முர்மு! மொத்த வாக்குகளில் 50 சதவிகிதத்தை தாண்டினார்
டெல்லி: இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 50%க்கும அதிகமான வாக்குகளை பெற்று நாட்டின் புதிய குடியரசு தலைவர் ஆகிறார்.
குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பாஜக சார்பில் யாரை நிறுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் அறிவிக்கப்பட்டனர். இரு வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர்.
திரௌபதி முர்முவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மட்டுமல்லாமல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தல்
இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. பல்வேறு மாநில தலைமைச் செயலகங்களில் நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் கடந்த 18ஆம் தேதி மாலையே விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.

எம்பிக்கள்
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள் என சுமார் 4809 வாக்காளர்களில் 776 எம்பிக்கள், 4,033 எம்எல்ஏக்கள் ஆவர். எம்பிக்கள் மக்களவை செயலகத்திலும், எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகத்திலும் வாக்களித்தனர். இந்த தேர்தலில் 99.18 சதவீத வாக்குகள் பதிவானது. 10 மாநிலங்கள் மற்றும் புதுவை யூனியன் பிரதேசத்தில் 100 சதவீத வாக்குகள் பதிவாகின. 2 பாஜக எம்பிக்கள் உள்பட 8 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை.

மொத்த வாக்குகள்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆகும். இந்த மொத்த மதிப்பில் 50 சதவீதத்தை காட்டிலும் அதிகமாக வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

வாக்கு எண்ணிக்கை
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் காலை தொடங்கின. முதலில் எம்பிக்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதையடுத்து மாநிலங்களில் எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகள் அவர்கள் மாநிலத்தின் ஆங்கில வரிசைப்படி எண்ணப்படுகிறது. இதுவரை மூன்று சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு உள்ள நிலையில், அவற்றில் திரௌபதி முர்மு 2161 வாக்குகளையும் யஷ்வந்த் சின்ஹா 1058 வாக்குகளையும் பெற்றுள்ளார்கள்.

திரௌபதி முன்னிலை
திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 5,77,777 ஆகும். யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகளின் மதிப்பு 2,61,062 ஆகும். 15 எம்பிக்களின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வென்றதன் மூலம் இந்திய வரலாற்றில் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையை திரௌபதி முர்மு பெற்றுள்ளார். கடந்த முறை நடந்த ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் 7,02,044 வாக்குகளையும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மீரா குமார் 3,67,314 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications