மதச்சார்பற்ற சிவில் சட்டம்.. காலத்தின் தேவை! சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
டெல்லி: நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் மக்களுக்கு உரையாற்றிய அவர், மதச்சார்பற்ற சிவில் சட்டம் காலத்தின் தேவை என்று பேசியிருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 11வது முறையாக பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார். அதன் பின்னர் தேசியக் கொடிக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. பின்னர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றிய அவர், பொது சிவில் சட்டம் குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது, இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைச் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் உரிமையியல் சட்டங்கள் எனப்படும் சிவில் சட்டங்கள் மட்டும் சாதி, மத, இன ரீதியாக கலாசாரத்திற்கேற்ப மாறுபடும். முஸ்லிம்கள் மட்டுமல்ல, சீக்கியர்கள், ஜெயின்கள் என்று ஒருவர் சார்ந்துள்ள மதத்திற்கேற்ப சிவில் சட்டங்கள் மாறுபடுகின்றன. இந்து மதத்திலும் இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் வரிச்சலுகைகள் உண்டு. இந்துக்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கவும், ஜீவனாம்சம் பெறவும் தனி சட்டங்கள் உண்டு.
பொது சிவில் சட்டம், தனிநபர் உரிமையான எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியுள்ள உரிமைகளைப் பறிப்பதற்கும், பிரிவு-29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும்.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 44 குறிப்பிடும் பொது சிவில் சட்டம், பொதுவான மதம் சாராத பல்வேறு சமூகச் செயல்களுக்கு, குறிப்பாக இரு நபரிடையே ஒப்பந்தங்கள், சொத்துப் பரிமாற்றத்துக்கான சட்டங்கள், பணப் பரிமாற்ற ஆவணங்கள், கருவிகள் குறித்த சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தை வழங்குகிறதே தவிர, மத வழக்கங்களுக்கானதல்ல.
பொது சிவில் சட்டத்தை திணிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் மத விஷயங்களில் அரசின் முரண்பாடாக கருதப்படலாம், மேலும் பல்வேறு மத சமூகங்களுக்கிடையில் ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும் முயற்சியாகவும் கருதப்படும். அரசியலமைப்புச் சீர்குலைவை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இப்படி இருக்கையில் பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் பொது சிவில் சட்டம் குறித்து கூறியுள்ளார். ஏற்கனெவே கடந்த லோக்சபா தேர்தலின்போதும் பாஜக பொது சிவில் சட்டம் குறித்து வாக்குறுதியளித்திருந்தது.
இப்படி இருக்கையில் இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய நரேந்திர மோடி, "பொது சிவில் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் விவாதித்து, பலமுறை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நாட்டின் பெரும் பகுதியினர் இதை நம்புகிறார்கள் அது உண்மையும்கூட. நம்முடைய சிவில் சட்டம் ஒரு வகுப்புவாத சிவில் சட்டமாகும். நாட்டில் மதச்சார்பற்ற சிவில் சட்டம் தேவை. இது காலத்தின் தேவையாக இருக்கிறது. பொது சிவில் சட்டம்தான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்கும்" என்று கூறுகிறார்.
மதச்சார்பற்ற நாட்டில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் (பொது சிவில் சட்டம்) வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் நீண்ட நாள் வலியுறுத்தலாக இருந்து வருகிறது.
பொது சிவில் சட்டமும், மதச்சார்பற்ற சிவில் சட்டமும் ஏறத்தாழ ஒரே மாதரியாக இருந்தாலும், இதில் சில அம்சங்கள் மாறுபட்டிருக்கின்றன. அதாவது, மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்பது, சட்ட அமைப்பிலிருந்து மதத்தை பிரிப்பதில் கவனம் செலுத்துகிறது. இதே பொது சிவில் சட்டம் ஒற்றை, ஒரே மாதிரியான சட்ட கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மதச்சார்பற்ற சிவில் சட்டம், தனிப்பட்ட சட்டங்களுடன் இணைந்து இருக்க முடியும். ஆனால் பொது சிவில் சட்டம் அவற்றை மாற்ற முற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications