ஊழலா? ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! யாரா இருந்தாலும் தப்ப முடியாது! பிரதமர் மோடி எச்சரிக்கை!
டெல்லி : அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் நாடாக மாற்றுவது ஒவ்வொருவரின் கடமை எனவும், தனிநபராக இருந்தாலும் அல்லது ஒரு நிறுவனமாக இருந்தாலும் சரி ஊழலில் ஈடுபடும் யாரும் தப்பவே முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
குஜராத் முதல்வராக இருந்து தற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி தொடர்ந்து ஊழலுக்கு எதிராக பல்வேறு செயல் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். குஜராத் மாடலை வைத்து ஆட்சியைப் பிடித்த பிறகு தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் இருக்கிறது பாஜக.
இன்னும் இரு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தலை இந்தியா சந்திக்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக குஜராத் சட்டமன்றத் தேர்தலும் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கின்றன. இது நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒத்திகையாகவே பார்க்கப்படுகிறது.

ஊழலற்ற இந்தியா
இந்த இரு தேர்தல்களிலும் வெற்றி பெறும் கட்சிகள் அதனை நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் ஒரு பகுதியாக பார்க்கப் போவது நிச்சயம். இதற்காக காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பலவும் தீவிர முனைப்பு காட்டி வரும் நிலையில் குஜராத்தை குறிவைத்து பல திட்டங்களை அறிவித்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அது மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை ஊழலற்ற இந்தியா என்பது பாஜகவின் கொள்கை பிரச்சாரங்களில் ஒன்றாக இருக்கிறது.

பாஜக கவனம்
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் காமன் வெல்த், 2ஜி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தே பாஜக காங்கிரஸ் கட்சியை தோற்கடித்தது, தற்போது வரை அது தொடர்பான வழக்குகள் விசாரணையில் இருக்கும் நிலையில் காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறிவரும் பாஜக தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வெளிச்சம் படாமல் பார்த்துக் கொள்வதாக கூறுகின்றனர் பாரதிய ஜனதா கட்சியினர்,

ஊழல் விழிப்புணர்வு வாரம்
தான் பேசும் நிகழ்ச்சிகளிலும் ஊழல் குறித்த பேச்சு தான் இடம்பெற வேண்டும் என தனிக் கவனம் செலுத்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில் இந்தியாவை 25 ஆண்டுகளுக்குள் வல்லரசு நாடாக உருவாக்க வேண்டியது அனைவரின் கடமை எனவும் ஊழலில் ஈடுபடும் யாரும் தப்ப முடியாது என கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இந்த மாத இறுதியில் இருந்து அதாவது 31ஆம் தேதியிலிருந்து நவம்பர் 6ஆம் தேதி வரை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி
இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு செய்தியில்,"ஊழலை ஒரு சதவீதம் கூட சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கையுடன் கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியா வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. நேர்மையான ஒவ்வொரு நபரும் தங்களை பற்றி பெருமை கொள்ளும் நம்பிக்கையான சூழல் உருவாகி இருக்கிறது. இங்கு ஊழலில் ஈடுபடும் எந்த நபரோ அல்லது நிறுவனமோ தப்பிக்க முடியாது என்ற கொள்கையில் இந்தியா தெளிவாக உள்ளது. ஊழலை வேரறுக்க முழு செயல்முறையும் முழு அமைப்பும் வெளிப்படை தன்மை கொண்டதாக மாற்றப்பட்டிருக்கிறது. தற்போது மட்டுமல்ல இனி வரும் காலங்களிலும் எங்குமே ஊழலுக்கு வாய்ப்பே இல்லை. அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவை மாபெரும் வளர்ந்த நாடாக மாற்றுவது ஒவ்வொருவரின் கடமை. தொழில்நுட்பம் மற்றும் சீர்திருத்தங்கள் மூலம் இந்த அமைப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications