கல்வி, சமூகம் என 20 துறைகளில் சிறந்தவர்களுக்கு.. படைப்பாளர்கள் விருது! பிரதமர் மோடி வழங்கினார்
டெல்லி: சமூக மாற்றம், சுற்றுச்சூழல், கல்வி போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் விதமாக தேசிய படைப்பாளர்கள் விருதை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார்.
இந்த ஆண்டுதான் முதல் முறையாாக தேசிய படைப்பாளர்கள் விருது வழங்கப்படுகிறது என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிரதமர் மோடி இன்று காலை 10:30 மணியளவில் புதுதில்லி பாரத் மண்டபத்தில் முதல் தேசிய படைப்பாளர்கள் விருதை வழங்கினார்.

இது குறித்து அரசு தரப்பில் கூறுகையில், "கதை சொல்லல், சமூக மாற்ற ஆதரவு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, கல்வி, கேமிங் உள்ளிட்ட தளங்களில் சிறப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்திய படைப்புகளையும், அதற்குரியவர்களையும் அங்கீகரிக்கும் முயற்சியாக தேசிய படைப்பாளர்கள் விருது இருக்கும். நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த படைப்பாற்றலைப் பயன்படுத்துவதற்கான ஒரு தளமாக இந்த விருது கருதப்படுகிறது.
இந்த விருதின் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படும் விதமே தனித்தன்மையாக இருக்கிறது. அதாவது விருதுக்காக 20 வெவ்வேறு துறைகளில், சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிந்துரைகள் பெறப்பட்டன. இந்த பரிந்துரைகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக 3 சர்வதேச படைப்பாளிகள் உட்பட 23 பேரை விருதுக்குழு தேர்வு செய்திருக்கிறது. மக்களின் தேர்வை இந்த விருது பிரதிபலிக்கிறது.
சிறந்த கதைசொல்லிக்கான விருது உட்பட இருபது பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படும். ஆண்டின் பிரபல படைப்பாளி, பசுமை சாம்பியன் விருது, சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி, மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய விவசாய படைப்பாளி, ஆண்டின் கலாச்சார தூதர், சர்வதேச படைப்பாளி விருது, சிறந்த பயண படைப்பாளி விருது, தூய்மை தூதர் விருது, நியூ இந்தியா சாம்பியன் விருது, டெக் கிரியேட்டர் விருது, ஹெரிடேஜ் ஃபேஷன் ஐகான் விருது, மிகவும் படைப்பாற்றல் கொண்ட படைப்பாளி (ஆண் & பெண்), உணவுப் பிரிவில் சிறந்த படைப்பாளி, கல்விப் பிரிவில் சிறந்த படைப்பாளி, கேமிங் பிரிவில் சிறந்த படைப்பாளி, சிறந்த மைக்ரோ கிரியேட்டர், சிறந்த நானோ படைப்பாளி, சிறந்த உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி படைப்பாளர் என்கிற தலைப்பில் விருதுகள் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமி என்பவர் பிரதமரின் பாதங்களை தொட்டு வணங்கினார். அப்போது பதிலுக்கு பிரதமர் மோடியும், கீர்த்திகாவின் பாதங்களை வணங்கினார். இச்சம்பவம் விருதாளர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோஷியல் மீடியாக்களிலும் இது தொடர்பான வீடியோக்கள் வேகமாக பரவி வருகின்றன.

சிறந்த கதை சொல்லி என்கிற பிரிவில் கீர்த்திகாவுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. இவர் வரலாற்று தகவல்கள் சோஷியல் மீடியாக்கள் மூலம் தொடர்ந்து பதிவேற்றி வந்திருக்கிறார்.
விருதுகளை வழங்கிய பின்னர் பேசிய பிரதமர் மோடி, "மகாசிவராத்திரி தினத்தில் விருதுகள் வழங்கப்பட்டிருப்பது தற்செயலாக நடந்திருக்கிறது. விருது பெற்ற உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இன்று விருது பெற்றுள்ளவர்களின் படைப்புகள் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விருது மூலம் இணையத்தின் மிகவும் மதிப்பு மிக்க நபராக உயர்ந்திருக்கிறீர்கள். இந்த திறமைகள் மேலும் வளரட்டும். நமது நாட்டினரின் திறமைகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று கூறியுள்ளார். மேலும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை குறைக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications