சிவகாசி பட்டாசில் நச்சுத்தன்மை வாய்ந்த பேரியம் நைட்ரேட்?? பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் சொல்வது என்ன
டெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே பட்டாசுகளைத் தயாரிக்கிறோம் என்றும் பட்டாசு தயாரிப்பதில் எவ்வித விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்று பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
பட்டாசு தொழிலை மட்டுமே நம்பி பல லட்சக்கணக்கானோர் இங்கு உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு காரணங்களால் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை.

பட்டாசு தடை
காரணம் டெல்லி உட்பட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும் பல மாநிலங்களில் காற்று மாசு காரணமாகத் தீபாவளி பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட காலம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் உற்பத்தி குறைக்கப்பட்டதால் பல தொழிலாளர்கள் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலையில் 4 மணி நேரமும், மாலையில் 4 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

நீதிபதி கருத்து
நீதிபதி எம்.ஆர்.ஷா, ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான அமர்வு முன் கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் , சிலரின் வேலைவாய்ப்பு என்ற போர்வையில், பிற மக்களின் வாழும் உரிமையைப் பறிக்க முடியாது. வேலைவாய்ப்புக்கும், வேலையின்மை மற்றும் குடிமக்களின் வாழ்வதற்கான உரிமைக்கும் இடையிலான விஷயங்களைச் சமமாகப் பார்த்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிபிஐ அறிக்கை
மேலும், பட்டாசு தயாரிப்பில் மிகக்கடுமையான முறையில் விதிமீறல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். பட்டாசு தயாரிப்பு தொடர்பாக சிபிஐ அளித்துள்ள முதற்கட்ட ஆய்வறிக்கை மோசமாக உள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். சிபிஐ கண்டறிந்த ஆரம்பக் கட்ட அறிக்கைகளை மனுதாரர், எதிர் மனுதாரர்களுக்கு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டாசு தயாரிக்க உதவும் பேரியம் நைட்ரேட் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த தனிமம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சில தனியார் நிறுவனங்கள் அதிகமாகப் பேரியம் தனிமத்தைப் பயன்படுத்துவதாக சிபிஐ அளித்துள்ள முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

உற்பத்தியாளர்கள் மறுப்பு
இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், இது குறித்து பட்டாசு உற்பத்தி சங்கம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் பட்டாசு தயாரிப்பதில் எவ்வித விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே பட்டாசுகளைத் தயாரிக்கிறோம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டு இருந்ததாகக் கூறிய சிபிஐ குற்றச்சாட்டு மறுப்பு தெரிவித்துள்ள பட்டாசு உற்பத்தியாளர் சங்கம், பேரியம் நைட்ரேட் அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கையில் சேமித்து மட்டுமே வைத்துள்ளோம் என்றும் 30% பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தலாம் என்று பரிந்துரையை மட்டுமே பின்பற்றுகிறோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications