நடுவானில் எரிபொருள் நிரப்ப.. பயணிகள் விமானத்தை எரிபொருள் டேங்கர் விமானமாக மாற்றும் பாதுகாப்புத்துறை
டெல்லி: இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் பயணிகள் விமானத்தை எரிபொருள் டாங்கி விமானங்களாக மாற்ற முடிவு செய்துள்ள பாதுகாப்புத்துறை, அதற்காக இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய அரசுக்கு ராணுவ தளவாடங்களை தயாரித்து வழங்கி வரும் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இஸ்ரேல் நாட்டின் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இணைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் பயணிகள் விமானங்களை, நடுவானில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பயன்படும் எரிபொருள் தாங்கும் விமானங்களாக மாற்ற இருக்கிறது. இதில், கார்கோ மற்றும் போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.
இஸ்ரேலுக்கு லாபம்
இந்த ஒப்பந்தத்தின்படி, போயிங் 767 பயணிகள் விமானத்தை இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் இந்திய ராணுவத்துக்காக எரிபொருள் தாங்கும் விமானமாக மாற்ற இருக்கிறது. இந்த போயிங் 767 விமானத்தை இத்தாலி மற்றும் ஜப்பான் ராணுவங்களும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்தில் முக்கிய பங்கு வகித்து வரும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு இது லாபகரமான வணிகமாகவே பார்க்கப்படுகிறது.
பெகாசஸ் விமானம்
அதே நேரம் போயிங் நிறுவனத்திடம் எரிபொருள் தாங்கிச் செல்வதற்கு என்றே KC 46 பெகாசஸ் என்ற சிறப்பு விமானம் உள்ளது. போயிங் 767 பயணிகளின் விமானத்தின் மற்றொரு மாதிரிதான் KC 46. எனவே இந்தியாவிடம் உள்ள போயிங் 767 விமானங்களை எரிபொருள் தாங்கும் விமானமாக மாற்றுவதற்கு தேர்வு செய்துள்ளனர்.
விமானப்படை எதிர்கொண்ட சவால்
நடுவானில் விமானங்களின் எரிபொருளை நிரப்புவது என்பது இந்திய விமானப் படைக்கு சவாலான காரியமாகவே இருந்து வந்தது. நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் இல்லாதது குறையாக பார்க்கப்பட்டு வந்தது. தற்போது உருமாற்றம் செய்யப்படும் போயிங் 767 விமானம் அந்த குறைகளை நிவர்த்தி செய்வதுடன், போர் விமானங்கள் நீண்ட தூரம் பயணிக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
ரிப்பேர் ஆன 6 ரஷ்ய விமானங்கள்
தற்போது இந்தியாவிடம் ரஷ்யாவின் 6 இல்யுஷின் 78 டேங்கர் விமானங்கள் உள்ளன. இது முதன்முதலில் 2003 ஆம் ஆண்டு வாங்கப்பட்டவை. ஆனால், தற்போது அவை அடிக்கடி பழுதடைவதன் காரணமாக பராமரிப்புக்காக அனுப்பி வைக்கப்படுவதால் புதிய டேங்கர் விமானங்களின் தேவை மேலோங்கி இருக்கிறது. எனவே புதிய டேங்கர் விமானங்களை வாங்குவதற்கும் இந்தியா முயன்று வருகிறது.
பிரான்ஸுடனும் பேச்சுவார்த்தை
ஆனால், முன்னணி விமான நிறுவனங்களான ஏர் பஸ்ஸும் போயிங்கும் சர்ச்சையில் சிக்கி இருக்கும் சூழலில் பிரான்ஸ் அரசுடன் A330 மல்டி ரோல் டேங்கர் விமானம் ஒன்றை வாங்கவும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த சூழலில்தான், 6 பயணிகள் விமானங்களை டேங்கர் விமானங்களாக மாற்றுவதற்கு இஸ்ரேல் நிறுவனத்தோடு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
மறைமுக பார்ட்னராக உபி நிறுவனம்
இதில் மற்றுமொரு முக்கிய தகவல் என்னவென்றால், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த லோஹியா ஏரோஸ்பேஸ் நிறுவனம், இஸ்ரேல் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த விமானங்களை மாற்றும் பணியில் ஈடுபடுகிறது. ராணுவ தளவாடங்களுக்கு தேவையான கார்பன் பைஅர், கிளாஸ் பைபர்களை தயாரிப்பது இந்த நிறுவனம் முன்னோடியாக உள்ளது.