நுபுர்சர்மாவின் தலையை துண்டிப்போருக்கு பரிசு அறிவித்த மதகுரு.. சுற்றிவளைத்த போலீஸ்! தீவிர விசாரணை
டெல்லி: இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசிய நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்போருக்கு எனது வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளை பரிசாக வழங்குவேன் என வீடியோ வெளியிட்ட ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவின் மதகுருவை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் நுபுர் சர்மா. இவர் மே மாதம் இறுதியில் இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதற்கு வெளிநாடுகள், இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நுபுர் சர்மா தலையை துண்டித்தால் வீடு, நிலம் பரிசு! வீடியோ வெளியிட்ட அஜ்மீர் நபருக்கு போலீஸ் வலை
நுபுர் சர்மா தலையை பரிசு
இந்நிலையில் நுபுர் சர்மா விஷயத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நுபுர் சர்மாவின் தலையை வெட்டுவோருக்கு தனது தனது வீடு மற்றும் சொத்துக்களை பரிசாக வழங்குவதாக அஜ்மீர் பகுதியை சேர்ந்த சல்மான் சிஷ்டி என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: ‛‛குவாஜா சாஹேப் மற்றும் முகமது சாஹேப் பெருமைக்கு நுபுர் சர்மா களங்கம் விளைவித்துள்ளார். இவரின் தலையை கொண்டு வருபவருக்கு நான் எனது வீட்டையும் நிலச் சொத்துகளையும் கொடுப்பேன்" என கூறியிருந்தது.
மதக்குரு கைது
இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விகாஸ் சங்வான் கூறுகையில், ‛‛சல்மான் சிஷ்டியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வீடியோவை டெலிட் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார். இந்நிலையில் சல்மான் சிஷ்டியை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் அஜ்மீர் தர்காவில் மதகுருவாக இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர் மீது குற்றப்பின்னணி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தர்கா நிர்வாகம் கண்டனம்
இந்நிலையில் அஜ்மீர் தர்கா நிர்வாகம் இதற்குகடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவரது பேச்சு மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்தும். இது அவரது தனிப்பட்ட கருத்து. இதற்கும் தர்காவுக்கும் சம்பந்தம் இல்லை. இதுபோன்ற கருத்துகளை யாரும் வெளியிடக்கூடாது என நிர்வாகம் கூறியுள்ளது.
ஆதரவு தெரிவித்த 2 பேர் கொலை
முன்னதாக நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்த பதிவிட்டதாக கடந்த மாதம் இறுதியில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரை சேர்ந்த கண்ணையாலால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இவருக்கு முன்பாக மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த மெடிக்கல் கடைக்காரரான உமேஷ் பிரஹலாத்ராவ் என்பவரும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்குகள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.