"நானும் ஒரு காலத்தில் என்சிசி மாணவர்தான்.." NCC தொப்பியுடன் அணிவகுப்பில் கலக்கிய பிரதமர் மோடி
டெல்லி: குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு என்சிசி அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜனவரி 28ஆம் தேதி டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பிரதமர் மோடி
இந்த நிகழ்ச்சியில் என்சிசி மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் வீரதீர சாதனைகளை மேற்கொண்டர். என்சிசி மாணவர்களின் அணிவகுப்பைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். ராணுவ ஆக்ஷன்கள், ஸ்லிதரிங், மைக்ரோலைட் ஃப்ளையிங், பாராசெயிலிங் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளில் என்சிசி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்களின் சாகசங்களை ரசித்த பிரதமர் மோடி, கைதட்டி உற்சாகப்படுத்தினார்.

நாட்டிற்கான அர்ப்பணிக்க வேண்டும்
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இளைஞர்களின் சக்தி நாட்டிற்குத் தேவை. நமது நாட்டின் நலனை முன்னிலைப் படுத்தும் இளைஞர்களை உலகின் எந்த ஒரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. அடுத்த 25 ஆண்டுகள் உங்கள் செயல்பாடுகள் அனைத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணிக்க வேண்டும். அனைவரின் கையிலும் இப்போது டெக் சாதனங்கள் உள்ளது. இதைக் கொண்டு நல்ல விஷயங்களை மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டுமே தவிரத் தவறான விஷயங்களுக்குப் பலியாகி விடக்கூடாது.

பெண்கள்
இந்த அணிவகுப்பில் அதிகப்படியான பெண் கேடட்கள் பேரணியில் பங்கேற்றுள்ளனர், இதுதான் இந்தியா காணும் சிறப்பான ஒரு மாற்றம். கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டின் பாதுகாப்புப் படைகளில் பெண்களுக்கு அதிகப் பொறுப்புகள் வழங்கப்படுகிறது. நாம் அனைவரும் இந்தியாவின் வேர்களுடன் இணைய வேண்டும். உங்களின் உறுதியுடனும் ஆதரவுடனும் இந்தியாவின் எதிர்காலத்தை நம்மால் மாற்ற முடியும். போதைப் பழக்கம் இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்கிறது, அதற்கு எதிராக நாம் போராட வேண்டும்.

நானும் என்சிசி மாணவர்
நானும் என்சிசியில் மாணவராக இருந்தவன் என்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். என்சிசியை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தாய்நாட்டிற்கான தன்னலமற்ற மற்றும் அர்ப்பணிப்புள்ள சேவைக்காக என்சிசிக்கு நான் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் எல்லைப் பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய என்சிசி கேடட்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

என்சிசி தொப்பி
இந்த நிகழ்ச்சியில் தானும் ஒரு என்.சி.சி மாணவன் என்பதை நினைவு கூறும் வகையில் பிரதமர் மோடி என்.சி.சி-இன் பாரம்பரிய தொப்பியான ஹேக்கிளை அணிந்தவாறே இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டார். மேலும், சிறந்த என்சிசி மாணவர்களுக்குப் பிரதமர் மோடி சிறப்பு பதக்கங்களையும் வழங்கினார். இது தொடர்பான வீடியோ மற்றும் ஃபோட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications