பப்ஜி காதல்! இளைஞரோடு வாழ நொய்டா வந்த பாகிஸ்தான் பெண்! சவூதியில் குமுறிய கணவர்! மோடியிடம் உதவி
டெல்லி: பப்ஜி விளையாட்டில் பழக்கமான நொய்டா இளைஞருடன் சேர்ந்து வாழ பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் தனது 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சவூதியில் உள்ள அவரது கணவர் உருக்கமாக கைகளை கூப்பி பிரதமர் மோடியிடம் உதவி கேட்டு உருக வைத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் சச்சின் (வயது 22). இவர் செல்போனில் அதிகமாக பப்ஜி விளையாட்டை விளையாடும் பழக்கம் கொண்டிருந்தார். இதையடுத்து பப்ஜி விளையாட்டின் மூலம் சச்சினுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் பழக்கம் ஆனார்.

அவரது பெயர் சீமா ஹைதர் (27). இவர் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்தவர். சீமாவுக்கு திருமணமாகிவிட்டது. குலாம் என்ற கணவரும், 4 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தான் சீமாவுக்கு பப்ஜியை அடிக்கடி விளையாடும் பழக்கம் கொண்டுள்ளார்.
இதையடுத்து இவர்கள் 2 பேருக்கும் இடையேயான பழக்கம் என்பது இன்னும் நெருக்கமானது. இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் நேபாளத்தில் நேரிலும் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. சீமாவின் கணவர் குலாம் சவூதி அரேபியாவில் வேலை செய்து வரும் நிலையில் இவர்கள் 2 பேரும் சமூக வலைதளம் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தான் சீமா தனது கணவரை பிரிந்து சச்சினுடன் வாழ முடிவு செய்தார். இதையடுத்து அவர் தனது 4 குழந்தைகளுடன் நோபளம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து நொய்டாவை அடைந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மே மாதம் நடந்துள்ளது. அதன்பிறகு சீமா, சச்சினுடன் நொய்டாவில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இதற்கிடையே தான் சீமாவின் நடத்தையில் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசில் புகார் செய்தனர். இதுபற்றி அறிந்த சீமா, சச்சின் ஹரியானா சென்றனர். அங்கு வைத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் உடந்தையாக செயல்பட்டதாக சச்சின் தந்தை நேத்ரா பால் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவர்களிடம் போலீசார் தீவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் இந்தியா ஓடிவந்த சீமா ஹைதரின் கணவர் குலாம் ஹைதர் வீடியோ ஒன்றின் மூலம் பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்று வைத்துள்ளார். இந்த வீடியோவில் குலாம் ஹைதர் உருக்கமான விஷயங்களை பேசியுள்ளார். வீடியோவில் அவர் கூறியதாவது:

எனது மனைவி, குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்துள்ளார். பப்ஜி விளையாட்டில் பழகி அவரை இந்தியாவுக்கு அந்த நபர் வரவழைத்துள்ளார். எனது மனைவி, குழந்தைகளை மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட வேண்டும். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் உதவி செய்ய வேண்டும்.
அப்போது தான் பாகிஸ்தானில் நாங்கள் குடும்பமாக வாழ வேண்டும். மேலும் இந்திய ஊடகங்கள் என்னுடன் கைகோர்த்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களால் தான் எனது மனைவி, குழந்தைகளின் இருப்பிடத்தை கண்டுப்பிடிக்க முடிந்தது'' என கைகளை கூப்பி உருக்கமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications