டெல்லி சம்பவத்தில் விவசாயிகள் கைகாட்டிய... நடிகர் தீப் சித்து 26-ம் தேதி முதல் மாயம்?
டெல்லி: டெல்லி செங்கோட்டையில் குடியரசு தினத்தில் நடந்த சம்பவத்தில் சீக்கிய மதக்கொடியை ஏற்ற காரணமாக இருந்ததாக விவசாயிகள் கை காட்டிய தீப் சித்து பஞ்சாபி நடிகர் தீப் சித்து மாயமாகி உள்ளதாக தெரிகிறது.
தீப் சித்து சம்பவ இடத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பித்து விடுவதுபோல் வீடியோ காட்சிகளில் பதிவாகி உள்ளன.
டெல்லி சம்பவம் தொடர்பாக காவல்துறை தாக்கல் செய்த வழக்குப்பதிவில் தீப் சித்துவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
டெல்லியில் பதற்றம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் சமூக விரோதிகள் புகுந்தனர். இதனால் போராட்டம் திசை மாறியது. சிலர் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாய சங்க கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லியே பரபரப்பானது.
தீப் சித்து மீது குற்றச்சாட்டு
பஞ்சாபி நடிகரும், பாடகருமான தீப் சித்துதான் இளைஞர்களை செங்கோட்டைக்கு அணிவகுத்து சென்று சீக்கிய மதக் கொடியை ஏற்றிவைக்க இளைஞர்களை தூண்டியதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டின. தீப் சித்து போராட்டத்தை திசை திருப்பி காலிஸ்தானி இயக்கத்தை ஆதரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
தேசியக்கொடியை அகற்றவில்லை
இதைத்தொடர்ந்து தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள தீப் சித்து, தங்களது எதிர்ப்பை காட்டுவதன் அடையாளமாகவே செங்கோட்டையை நோக்கி பேரணி சென்றதாகவும், அங்கு தேசியக் கொடியை இறக்கவில்லை என்றும் தங்களுடைய கொடியை மட்டும் ஏற்றியதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
மாயமாகி உள்ளார்?
இந்த நிலையில் 26-ம் தேதி டிராக்டர் பேரணி திட்டமிட்ட பாதையில் இருந்து விலகிச் சென்றதைத் தொடர்ந்து, அங்கு பதற்றம் ஏற்பட்டதில் இருந்து பஞ்சாபி நடிகர் தீப் சித்து மாயமாகி உள்ளதாக தெரிகிறது. அவர் கடைசியாக 26-ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் 'நிஷான் சாஹிப்' கொடியை ஏற்றியுள்ளார். அதன்பிறகு நிலைமை தீவிரம் அடைந்ததால் தீப் சித்து சம்பவ இடத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பித்து விடுவதுபோல் வீடியோ காட்சிகளில் பதிவாகி உள்ளன. டெல்லி சம்பவம் தொடர்பாக காவல்துறை தாக்கல் செய்த வழக்குப்பதிவில் தீப் சித்துவின் பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.