"குவாட்" உச்சி மாநாடு.. முதல் முறையாக மோடி, ஜோ பிடன் இணைந்து பங்கேற்பு! சீனாவை தனிமைப்படுத்த வியூகம்
டெல்லி: அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் குவாட் (Quad) நாடுகள் கூட்டணி ஏற்படுத்தியுள்ளன. இவற்றின் தலைவர்கள் பங்கேற்கும் முதல் உச்சிமாநாடு இன்று நடைபெற உள்ளது.
பொருளாதார ரீதியாக சீனாவை சார்ந்திராமல், இயற்கை வளம், எரிவாயுத் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த இந்த குவாட் நாடுகள் கூட்டணி முயற்சிகள் எடுக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் இன்று "குவாட்" நாடுகளின் தலைவர்களின் முதல் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடி மற்றும் பிடென் ஆகியோர் பிரத்தியேகமாக உரையாடிக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்ற பிறகு, இந்திய பிரதமருடன் அவரின் முதல் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும்.
வாஷிங்டன் நேரப்படி காலை 8.30 மணி டெல்லி நேரப்படி இரவு 7 மணி, கான்பெராவில் இரவு 10.30 மணி, டோக்கியோவில் சனிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி பற்றி அதிகமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அமெரிக்க தடுப்பூசிகளை இந்தியாவில் அதிக அளவுக்கு உற்பத்தி செய்வதற்கான நிதி வசதியை ஏற்படுத்துவது, உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் இதில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் இதுபோன்று தடுப்பூசிக்கு, ஜப்பான் மற்றும் அமெரிக்கா கடனுதவி வழங்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த, நேவாவேக்ஸ், ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இதுபற்றி கூறுகையில், இந்தோ பசிபிக் மண்டலத்தில் நிலவக்கூடிய பாதுகாப்பு பிரச்சினைகள் பருவநிலை மாற்றம் கொரோனா நோய் பரவல் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவை பற்றி இதில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எத்தனையோ ஆலோசனைக் கூட்டங்கள் இதுவரை நடந்து இருக்கலாம். ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் நான்கு நாட்டு தலைவர்கள் மட்டத்திலான பங்களிப்பு இருப்பதால், புதிய கூட்டு முயற்சியாக இது முன்னெடுக்க உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் மற்றொரு முக்கியமான விஷயம் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. அது எலக்ட்ரிக் கார் மோட்டார் தயாரிக்க உதவக்கூடிய அரிய வகை உலோகங்களை சேமித்து வைப்பது ஆகும். தற்போது உலக அளவில் 60% அரிய வகை உலோகம் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் சீனாவை பிற நாடுகள் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். அதை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. காணொளி காட்சி மூலமாக நடைபெற உள்ள இந்த கூட்டம் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் நான்கு நாடுகளும் மலபார் 2020, என்ற பெயரில் வங்க கடலில் கடற்படை ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications