ரபேல் ஒப்பந்தத்தில் நிறைய தவறுகள் இருக்கிறது.. வெளியானது 8 பக்க கடிதம்.. மிக முக்கிய ஆதாரம்!
ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பாக 8 பக்கம் கொண்ட புதிய கடிதம் ஒன்று கசிந்து இருக்கிறது.
Recommended Video
டெல்லி: ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பாக 8 பக்கம் கொண்ட புதிய கடிதம் ஒன்று கசிந்து இருக்கிறது. இதன் மூலம் பாஜக அரசு செய்த ரபேல் ஒப்பந்தம், பல வகைகளில் தவறாக இருந்தது நிரூபணம் ஆகியுள்ளது. காங்கிரஸ் செய்த ஒப்பந்தம் போல அல்லாமல் இது மிக மோசமாக செய்யப்பட்டு இருக்கிறது.
ரபேல் ஒப்பந்த ஊழல் குறித்து புதுப்புது தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் தி இந்து ஆங்கில நாளிதழில் பத்திரிக்கையாளர் என்.ராம், ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி தனியாக பேர பேச்சுவார்த்தை நடத்தினார் என்று குற்றச்சாட்டு வைத்தார்.
இதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று இன்னொரு கட்டுரையை என்.ராம் எழுதி இருக்கிறார். ரபேல் ஒப்பந்தம் தொடர்பான எட்டு பக்க கடிதம் ஒன்றும் இதில் வெளியாகி இருக்கிறது.
8 பக்க லெட்டர்
ரபேல் ஒப்பந்தத்திற்காக உருவாக்கப்பட்ட ஐஎன்டி என்று அழைக்கப்படும் Indian Negotiating Team (பேரம் பேசும் குழு) குழுவை சேர்ந்த இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூன்று பேர்தான் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்கள். 7 பேர் குழுவில் இருந்த எம்.பி சிங், ஏ.ஆர் சுலே, ராஜீவ் வெர்மா ஆகிய மூன்று பேரும் அந்த குழுவின் தலைவருக்கு இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்கள்.
என்ன குற்றச்சாட்டு
இதில் அவர்கள் மத்திய பாஜக அரசு செய்த ரபேல் ஒப்பந்தம் மீது குற்றச்சாட்டு வைத்து உள்ளனர். அதில், ''பாஜக அரசின் 36 விமானங்களை வாங்கும் ரபேல் ஒப்பந்தம் எந்த வகையிலும் காங்கிரஸ் செய்த ரபேல் ஒப்பந்தத்தை விட சிறந்தது கிடையாது. இந்த ஒப்பந்தத்தில் பல பகுதிகள் தவறாக இருக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் விமானங்களை வாங்கினால் குறைவான தரத்தில் விமானங்கள் மிக தாமதமாக டெலிவரி செய்யப்படும். இதனால் பழைய ஒப்பந்தத்தை பின்பற்ற வேண்டும்'' என்று கூறி இருக்கிறார்கள்.
பொய் சொன்னதா?
இதன் மூலம் மத்திய அரசு நீதிமன்றத்திலும், லோக்சபாவிலும் பொய் சொன்னது தெளிவாகி இருக்கிறது. மத்திய அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் '' இந்த ஒப்பந்தம் மூலம் விமானங்கள் வேகமாக டெலிவரி செய்யப்படும். விமானங்கள் தரமாக இருக்கும். இது பழைய ஒப்பந்தத்தை விட சிறந்தது'' என்று கூறியது. லோக்சபாவில் நிர்மலா சீதாராமனும் இதே விஷயத்தைதான் கூறினார்.
இதிலும் இருக்கிறது
அதேபோல் பிரான்ஸ் அரசு விமானத்தை வழங்குவதற்கான எந்த விதமான கேரண்டியும் வழங்கவில்லை என்று இந்த கடிதத்திலும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். மத்திய அரசு இதற்காக பணம் கொடுத்தாலும் கூட பிரான்ஸ் அரசு விமானத்தை சரியாக இந்தியாவிற்கு கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. பணத்தை வாங்கி கொண்டு பிரான்ஸ் விமானத்தை கொடுக்காமல் இருக்கலாம்.
விலை சரியாக இல்லை
அதேபோல் இந்த ஒப்பந்தத்தில், பிரான்ஸ் கூறிய விலை மிகவும் அதிகமாக இருக்கிறது என்று அதிகாரிகள் புகார் அளித்து இருக்கிறார்கள். பிரான்ஸ் மிக அதிக விலைக்கு இந்த விமானங்களை அளிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. பழைய ஒப்பந்தத்தை விட இதில் அதிக விலை வைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.
என்ன பிரச்சனை
அதேபோல் இந்த ஒப்பந்தத்தில் தொடக்கத்தில் மொத்தம் 18 விமானங்கள் மட்டுமே வழங்கப்படும். அந்த விமானங்களும் தயார் நிலையில் இருக்காது. அதை வழங்கவும் 53 மாதங்கள் வரை ஆகும் என்று கூறி இருக்கிறார்கள். காங்கிரஸ் ஒப்பந்தத்தில் பிரான்ஸுக்கு இதைவிட குறைவான கால அவகாசமே கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த புதிய தகவல்கள் மூலம் ரபேலில் பாஜக பெரிய தவறு ஒன்றை செய்திருப்பது வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த ஆதாரங்கள் நீதிமன்றத்திலும் முக்கியத்துவம் பெற வாய்ப்புள்ளது.
புகைப்படம் நன்றி: தி இந்து