"வாக்கு திருட்டு!" அமித் ஷா சொன்ன பாயிண்டை வைத்தே லாக் செய்த ராகுல் காந்தி! உற்று பார்த்த பொதுமக்கள்
பாட்னா: வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து பீகாரில் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். அங்கு நடந்து கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, வாக்கு திருட்டு இப்போது நாடு முழுக்க பரவி வருவதாகவும் இதன் மூலமாகவே பாஜக ஆட்சியில் இருப்பதாகவும் விமர்சித்தார். மேலும், அமித் ஷா முன்பு கூட்டத்தில் சொன்ன ஒரு விஷயத்தை வாக்கு திருட்டு புகாருடன் இணைத்து ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.
காங்கிரஸின் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை முன்வைத்திருக்கிறார். அதாவது பல்வேறு தொகுதிகளிலும் புதிய வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் ஆகியவற்றில் பெரிய குளறுபடி நடந்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். இதன் மூலம் ஒருவரே பல தேர்தல்களில் வாக்களிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

ராகுல் காந்தி
இதை முன்வைத்து ராகுல் காந்தி இப்போது பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையை நடத்தி வருகிறார். அங்குச் சீக்கிரமே தேர்தல் நடைபெறும் நிலையில், அதை மனதில் வைத்தே காங்கிரஸ் இந்த யாத்திரையை நடத்தி வருகிறது. இந்த யாத்திரையில் பாஜக மீதும் வாக்கு திருட்டு தொடர்பாகவும் ராகுல் காந்தி தொடர்ச்சியாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இது தொடர்பாகச் சமீபத்தில் நடந்த பேரணி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, "பாஜக அரசு தான் அடுத்த 40-50 ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்று அமித் ஷா பலமுறை கூறியிருக்கிறார். பாஜக 40-50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்பதை அமித் ஷாவுக்கு எப்படி சொல்கிறார்.. இது ஒரு விசித்திரமான அறிக்கை.
அமித் ஷா சொன்ன பாயிண்டு
கடந்த 20017ல் மத்தியப் பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் அமித் ஷா என்ன பேசினார் என்பதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். அந்தக் கூட்டத்தில் அமித்ஷா நாம் 5-10 ஆண்டுகள் ஆட்சி செய்ய வரவில்லை.. குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் ஆட்சி செய்ய வந்துள்ளோம். 40-50 ஆண்டுகள் அதிகாரத்தில் இருக்கும்போது நாட்டில் பல பெரிய மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என அமித்ஷா பேசியிருந்தார்.
அர்த்தம் புரிந்துவிட்டது
அமித்ஷா பேச்சுக்கான அர்த்தம் இப்போது புரிந்துவிட்டது. இந்த (பாஜக) 'வாக்குத் திருட்டு' செய்கிறார்கள் என்ற உண்மை நாட்டிற்குத் தெரிய வந்துவிட்டது.. இது குஜராத்தில் தொடங்கியது, பின்னர் 2014இல் தேசிய அளவில் நடந்தது. அதன் பிறகு மற்ற மாநிலங்களிலும் இப்போது நடக்கிறது. நான் ஆதாரம் இல்லாமல் பேசவில்லை.. ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே பேசுகிறேன்.. நான் பொய் சொல்ல மாட்டேன், உண்மைகள் என்னிடம் இருக்கும்போது மட்டுமே இந்த விஷயங்களைச் சொல்கிறேன்.
பீகார் இளைஞர்கள் தங்கள் பலத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார்கள். இந்த எதிர்ப்பு பாஜக தலைவர்களையும் தேர்தல் ஆணையத்தையும் வாக்குகளைத் திருடும் முன் இருமுறை சிந்திக்க வைக்கும். இந்த அரசு அரசு மக்களின் உரிமைகளை படிப்படியாக அரிக்கிறது.. முதலில் வாக்கு, பின்னர் ரேஷன் கார்டு, அதன்பிறகு நிலம் என எல்லாவற்றையும் பறிக்கிறது. இதைத் தொடர எதிர்க்கட்சிகள் அனுமதிக்காது" என்றார்.
வாக்கு திருட்டு
கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, வாக்கு திருட்டு தொடர்பாக விரிவான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு ஆதாரம் எனச் சொல்லி அவர் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலின் போட்டோக்களை பகிர்ந்தார். இது அப்போது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், வாக்கு திருட்டுக் குற்றச்சாட்டை பாஜகவும் தேர்தல் ஆணையமும் திட்டவட்டமாக மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications