யுபிஎஸ்சி தேர்வில் அசத்திய காங்கிரஸ் தலைவரின் மகள்.. “காங்கிரஸே பெருமைப்படுகிறது” ராகுல் உற்சாகம்!
டெல்லி : யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் 45வது இடம் பிடித்த காங்கிரஸ் நிர்வாகியின் மகளுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது. முழு அர்ப்பணிப்புடன் நாட்டிற்காக உழையுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி நேற்று வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

யுபிஎஸ்சி தேர்வு
2021-ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து, இந்தத் தேர்வில் வெற்றி பெற்று தகுதி செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை யு.பி.எஸ்.சி தேர்வாணையம் நேற்று அறிவித்தது. அதன்படி, மொத்தம் 685 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு முடிவுகள்
நேற்று வெளியிடப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளின்படி, முதல் 3 இடங்களைப் பெண்களே பிடித்துள்ளனர். இதில் முதல் இடத்தை உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஷ்ருதி சர்மாவும், 2-வது இடத்தை அங்கிதா அகர்வால் என்பவரும், 3-வது இடத்தை காமினி சிங்லா என்பவரும் பிடித்து அசத்தியுள்ளனர். தேசிய அளவில் 42வது இடம் பிடித்த சுவாதி ஸ்ரீ தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

ராகுல் வாழ்த்து
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களை காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி வாழ்த்தினார். அவரது ட்விட்டர் பதிவில், இந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பெண்கள் முதல் 3 இடங்களைப் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவுக்கு மிகுந்த நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றும் பெரும் பொறுப்பு உங்கள் அனைவருக்கும் உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் பிரமுகரின் மகள்
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தகவல் தொடர்பு அணியின் தலைவரான சுஷில் ஆனந்த் சுக்லாவின் மகள் ஹ்ரத்தா சுக்லா, யுபிஎஸ்சி தேர்வில் 45வது ரேங்க் பெற்றுள்ளார். சுஷில் ஆனந்த் சுக்லா, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸின் செய்தித் தொடர்பாளராகவும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் பெருமை கொள்கிறது
ஷ்ரத்தா சுக்லாவை வாழ்த்தி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தகவல் தொடர்பு அணியின் தலைவரான சுஷில் ஆனந்த் சுக்லாவின் மகள் ஷ்ரத்தா, யுபிஎஸ்சி தேர்வில் 45வது ரேங்க் பெற்றுள்ளார். சத்தீஸ்கர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது. முழு அர்ப்பணிப்புடன் நாட்டிற்காக உழையுங்கள், உங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications