"நீங்க என்ன அரசுக்கு வேலை பார்க்கிறீங்களா?' செய்தியாளரிடம் சீறிய ராகுல் காந்தி.. கொந்தளிக்கும் பாஜக
டெல்லி: நாடாளுமன்றத்தில் செய்தியாளரைப் பார்த்து நீங்க என்ன அரசுக்கு வேலை பார்க்கிறீங்களா என்று ராகுல் காந்தி கேட்கும் வீடியோ வைரலாகியுள்ளது. இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ராகுல் ட்வீட் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மத்திய அரசு பல மசோதாக்களைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டிருந்தது.
இருப்பினும், எம்பிகள் சஸ்பெண்ட், லக்கிம்பூர் விவகாரம் என பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தொடர்ந்து முடக்கி வருகின்றனர்.
|
வைரல் வீடியோ
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கும் ராகுல் காந்திக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் செய்தியாளர் ஒருவரைப் பார்த்து ராகுல் காந்தி, "நீங்கள் அரசுக்காக வேலை செய்கிறீர்களா?" எனத் திரும்பத் திரும்பக் கேட்கிறார். சுமார் 26 நொடிகள் ஓடும் இந்த வீடியோவை பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

கொந்தளிக்கும் பாஜக
அதில் அமித் மாளவியா, "எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தைச் சீர்குலைப்பது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு ராகுல் காந்தி அவருடன் சண்டை போடுகிறார். மத்திய அரசு எதிர்க்கட்சிகளை விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு வர மறுக்கின்றன, காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியால் விவாதிக்க இயலாது, அதனால் அவர்கள் சீர்குலைக்க முயல்கின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.
|
ராகுல் பகிர்ந்த வீடியோ
அதேநேரம் இந்த செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக சுமார் ஒரு நிமிடம் ஓடும் மற்றொரு வீடியோவை ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் நாடாளுமன்றம் ஒழுங்காக நடக்காததாலேயே விவாதம் நடத்த முடியவில்லை என மத்திய அரசு கூறுவது தொடர்பாக ராகுல் காந்தியிடம் செய்தியாளர் கேள்வி எழுப்புகிறார். அப்போது செய்தியாளரைப் பார்த்து ராகுல் காந்தி, நீங்கள் அரசுக்கா வேலை செய்கிறீர்களா என்று கேட்கிறார்.

ராகுல் பதிலடி
மேலும், ராகுல் காந்தி, "சபையை ஒழுங்காக வைத்திருப்பது எதிர்க்கட்சிகளின் வேலை அல்ல, அது அரசின் வேலை. நீங்கள் சபையின் விதிகளைக் கூட எடுத்துப் பாருங்கள். சபையை நடத்துவது அரசின் பொறுப்பு. மேலும் விவாதத்தைத் தொடர அனுமதிப்பதும் கூட அவர்களின் பொறுப்பு தான். மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நீக்கம், கிழக்கு லடாக்கில் சீனா விவகாரம், ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் சபையில் விவாதம் செய்ய விரும்புகிறோம்" என்று பதில் அளிக்கிறார்.

என்ன அரசு
இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, "நாடாளுமன்றத்தைக் கையாளத் தெரியாத என்ன மாதிரியான அரசு இது ? லக்கிம்பூர் விவகாரம், குறைந்தபட்ச ஆதரவு விலை, லடாக், பெகாசஸ், எம்பிக்கள் இடைநீக்கம் போன்ற பிரச்சனைகளில் குரல் எழுப்புவதை நிறுத்த முடியாது. உங்களுக்குத் தைரியம் இருந்தால் விவாதம் நடக்கட்டும்!" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications