ஜூலை 1ஆம் தேதி அக்கவுண்டை செக் பண்ணுங்க.. ரூ.8500 கிரெடிட் ஆகியிருக்கும்!ராகுல் காந்தி வாக்குறுதி!
டெல்லி: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், ஜூலை 1ம் தேதி ஏழை பெண்களின் வங்கி கணக்கில் ரூ.8500 செலுத்தப்பட்டிருக்கும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டைப் போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், மே 7ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறது.

இதனையடுத்து இன்று 4ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. அதாவது, ஆந்திரா (25 தொகுதிகள்), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியப் பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), தெலங்கானா (17), உத்தரப் பிரதேசம் (13), மேற்குவங்கம் (8) ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 10 மாநிலங்களில் 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதியன்று ஏழை பெண்களின் வங்கி கணக்கில் ரூ.8500 வரவு வைக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியாக கூறியுள்ளார். ஏற்கெனவே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கூறியிருந்தது.
இது குறித்து விளக்கிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், "இந்தியாவுடைய ஜிடிபி நடப்பு ஆண்டில் 273 லட்சம் கோடி ரூபாய். இது கான்ஸ்டண்ட் விலை என்று சொல்லப்படும் நிலையான விலையில்.. நடப்பு விலையில் இது இன்னும் அதிகம். ஏழை மக்களை ஏழ்மையில் இருந்து அவர்களை விடுவிக்க.. ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுப்போம் என்பது உங்களுக்கு வியப்பாக தெரிகிறது.
நாங்கள் சமூக பொருளாதார கணக்கெடுப்பு, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதில் ஏழைகள் யார் என்பதை கண்டுபிடிப்போம். நாட்டில் 11 சதவிகிதமானவர்கள் ஏழை என்ற நிதி ஆயோக் சொல்கிறது. ஆனால் நிதி ஆயோக்கின் தலைமை அதிகாரி 5 சதவிகிதம் தான் ஏழை என்கிறார். இந்த இரண்டின் சராசரியை கணக்கிட்டு பார்த்தால் 8 சதவிகிதம் வரும்.
இதில் 8 சதவிகிதம் என்றால் ஏறத்தாழ 11.5 கோடி மக்கள். ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 5 பேர் எனில், 2.22 கோடி குடும்பங்கள் ஏழைகளாக இருக்கின்றனர். இந்த 2 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஒதுக்குவது என்பது நிச்சயம் முடியும். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், புல்லட் ரயில் திட்டத்திற்கும் கோடிக்கணக்கில் செலவிடும் நம்மால் நிச்சயம் இந்த தொகையை கொடுக்க முடியும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், வரும் ஜூலை 1ம் தேதி முதல் ஏழை பெண்களின் வங்கி கணக்கில் ரூ.8500 செலுத்தப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். அதாவது, "ஜூலை 1, 2024 அன்று, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் காலையில் தங்கள் வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்கும் போது, அவர்களது கணக்கில் 8500 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும்.
மேலும் இந்திய கூட்டணி அரசினால் இது ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சாத்தியமாகும். இது உங்களின் ஒரு வாக்கின் சக்தி. இப்போது பெண்கள் நம் பக்கம் இருப்பதால் நிலைமை மாறும்" என்று ராகுல் கூறியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் x சோஷியல் மீடியா தளத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications