டி.என்.ஏ குறித்த பேச்சு.. 'இந்துத்துவாக்களின் எண்ணமே இதுதான்'.. மோகன் பகவத்தை தாக்கிய ராகுல் காந்தி
டெல்லி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஏதாவது பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்வது வழக்கம். இந்த நிலையில் அவர் நேற்று இமாச்சல பிரதேசத்தில் பேசிய பேச்சுக்கு பல தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோகன் பகவத் முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து பேசினார். அப்போது பேசிய மோகன் பகவத், ' இந்தியர்களின் மரபணு 40000 ஆண்டுகளாக ஒன்று தான். நமது மூதாதையர்கள் ஒரே குலத்தவரே. அந்த மூதாதையர்களால் தான் நாடு வளம் பெற்றது' என்று கூறினார்.

மோகன் பகவத் பேச்சு
தொடர்ந்து பேசிய அவர் ''ஊடகங்கள் எங்களை மத்திய அரசின் 'ரிமோட் கண்ட்ரோல்' என்று குறிப்பிடுகின்றன. ஆனால் அது முற்றிலும் பொய்யானது. ஆனாலும் எங்கள் ஊழியர்களில் சிலர் நிச்சயமாக அரசின் அங்கத்தினர்தான். எங்களின் சேவகர்களுக்கு அரசாங்கம் எந்த விதமான சலுகையையும் வழங்குவதில்லை. அரசிடம் இருந்து எங்களுக்கு என்ன கிடைக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு எனது பதில் என்னவென்றால், நமக்குச் சொந்தமானதைக் கூட இழக்க நேரிடலாம் என்பதுதான் என்று மோகன் பகவத் தெரிவித்தார்.

ராகுல் காந்தி கண்டனம்
இந்தியர்களின் டி.என்.ஏ குறித்த மோகன் பகவத்தின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர், ' ஒவ்வொரு நபரின் டிஎன்ஏவும் வித்தியாசமானது மற்றும் தனித்துவமானது என்று இந்துக்கள் நம்புகிறார்கள். ஆனால் இந்துத்துவா மீது நம்பிக்கை உள்ளவர்கள், அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே டிஎன்ஏ இருப்பதாக நம்புகிறார்கள்' என்று மோகன் பகவத்தை தாக்கினார் ராகுல் காந்தி.

இந்துத்துவாவாதிகள்
இந்துக்கள் என்பது வேறு. இந்துத்துவா என்பது வேறு என்று ராகுல் காந்தி அடிக்கடி கூறி வருகிறார். இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் அனைத்து மதத்தையும் மதிப்பார்கள். ஆனால் இந்துத்துவாவாதிகள் அப்படி அல்ல என்று அவர் பாஜகவை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மோகன் பகவத்தின் பேச்சுக்கு காங்கிரஸ் மட்டுமில்லாது திரிணாமுல், சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அப்பட்டமான பொய்
''நாங்கள் மத்திய அரசின் ரிமோட் கண்ட்ரோல் அல்ல'' என்று ஆர்எஸ்எஸ் கூறுகிறது. இது எவ்வளவு அப்பட்டமான பொய் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியர்களை பிரித்து வைத்து பேசுவதே இவர்களின் வேலை என்று எதிர்கட்சிகள் கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications