ராகுல் தான் பெஸ்ட்! ‛இந்தியா’ கூட்டணி தலைவர் யார்? மம்தா - அகிலேஷுக்கு ஷாக் தந்த இந்தியா டுடே சர்வே
டெல்லி: ‛இந்தியா' கூட்டணிக்குள் கடும் குழப்பம் இருந்தாலும் கூட 65 சதவீதம் பேர் அந்த கூட்டணி தொடர விரும்புகின்றனர் என்று இந்தியா டுடே - சி வோட்டர் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ‛இந்தியா' கூட்டணியை வழிநடத்தும் தலைவர் யார்? என்பதில் ராகுல் காந்தி முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்ததாக மற்ற தலைவர்களின் பெயர்கள் உள்ள நிலையில் யார் யாருக்கு எவ்வளவு ஆதரவு வந்துள்ளது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்தியா டுடே - சிவோட்டர் இணைந்து தேசிய அளவில் ‛மூட் ஆஃப் தி நேஷன்' என்ற பெயரில் மக்களின் மனநிலை என்ன? என்பது பற்றிய சர்வேக்களை மேற்கொண்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 9 ம் தேதி வரை நாடு முழுவதும் இந்த சர்வே எடுக்கப்பட்டது.

மொத்தம் நாட்டில் உள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் வசிக்கும் 1 லட்சத்து 25 ஆயிரத்து 123 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியை எந்த தலைவர் வழிநடத்தலாம்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ‛இந்தியா' கூட்டணியை வழிநடத்தலாம் என்று அதிகமானவர்கள் கருத்து தெரிவித்தனர். அதன்படி சர்வேயில் பங்கேற்றவர்களில் 24 சதவீதம் பேர் ராகுல் காந்தியின் தலைமை தான் ‛இந்தியா' கூட்டணிக்கு வேண்டும் என்று கூறியுள்ளனர். இது ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டும் வகையில் உள்ளது.
அதேவேளையில் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டவர்களுக்கும் மக்களின் ஆதரவு என்பது உள்ளது.
அதன்படி ‛இந்தியா' கூட்டணியை வழிநடத்த மம்தா பானர்ஜிக்கு 14 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 சதவீதம் பேரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 6 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் தோல்வி, சட்டசபை தேர்தல் தோல்வி, ‛இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடு உள்ளிட்டவை இருந்தாலும் 65 சதவீதம் பேர் அந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது ‛இந்தியா' கூட்டணிக்கு பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய சூழலில் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு என்பது நிலவி வருகிறது.
சமீபத்தில் நடந்த முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ‛இந்தியா' கூட்டணி இரண்டாக உடைந்தது. கூட்டணியில் உள்ள ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி தனித்தனியாக போட்டியிட்டன. அதோடு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி ஆகியவை ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியை புறக்கணித்தன.
இதனால் வரும் காலத்தில் ‛இந்தியா' கூட்டணியின் நிலை என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் இந்தியா டுடே - சி வோட்டர் ‛மூட் ஆஃப் தி' நேஷன் சர்வே ரிசல்ட்டில் 65 சதவீதம் பேர் ‛இந்தியா' கூட்டணி தொடர வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications