‛திருடன்’ குட்டிக்கதை கூறிய ராகுல்.. மீண்டும் அதே வார்த்தையா? தகுதி நீக்கத்துக்கு பின் கடும் அட்டாக்
டெல்லி: எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தகுதி நீக்கத்தின் பின்னணியில் உள்ள காரணங்களை அடுக்கி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த வேளையில் அவர் ‛திருடன்' என ஒரு குட்டிக்கதை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து நேற்று ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் ராகுல் காந்தி எம்பி பதவியை இழந்துள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் ராகுல் காந்தியை எதிர்கொள்ள பாஜக பயப்படுவதால் தான் அவரை தகுதி நீக்கம் செய்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ராகுல் காந்தி பேட்டி
இந்நிலையில் தான் டெல்லியில் இன்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் காந்தி அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையேயான தொடர்பு பற்றி கேள்வி கேட்டதற்கு என்னை தகுதி நீக்கம் செய்துள்ளனர் என பகீரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும் தன்னை பற்றி பாஜக அமைச்சர்கள் பொய்களை பரப்புவதாகவும், தகுதி நீக்கம் செய்தாலும், சிறையில் அடைத்தாலும் உண்மையை எப்போதும் பேசுவேன் என ராகுல் காந்தி கூறினார்.

‛திருடன்’ என குட்டிக்கதை
அதன் பிறகு பத்திரிகையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். அப்போது அதானி விவகாரம் தொடர்பான ராகுல் காந்தியின் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி திருடன் என்ற சொல்லை பயன்படுத்தி குட்டிக்கதை போல் ஒன்றை கூறினார்.

திருடனை பிடித்தால்...
அப்போது, ‛‛நாம் முதலில் திருடனை பிடித்தால் திருடவில்லை என்ன கூறுவார்?. நான் திருடவில்லை என்பார். அதன்பிறகு அங்கே பாருங்கள்.. இங்கே பாருங்கள்.. என பலரை சுட்டிக்காட்டி அவர்கள் தவறு செய்யவில்லையா? என கேள்வி எழுப்புவார். நான் கேட்பது ஒன்று மட்டுமே. அதானி விவகாரத்தில் ரூ.20 ஆயிரம் கோடி எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? அது அதானியின் பணம் அல்ல. ஓபிசி பிரிவினரை அவமானப்படுத்தியதாக கூறுவதும், என் மீதான தற்போதைய தகுதி நீக்கம் செய்தது என்பதும் அதானி விவகாரத்தை திசைதிருப்புவதற்கான நோக்கமே ஆகும்'' என்றார்.

மீண்டும் திருடன்
ராகுல் காந்தி தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் என்பது மோடி என்ற பெயர் மட்டுமின்றி அவர் அன்று பயன்படுத்திய திருடன் என்ற சொல்லும் தான். இந்நிலையில் தான் தகுதி நீக்கத்துக்கு பிறகு ராகுல் காந்தி தனது முதல் பிரஸ்மீட்டிலேயே திருடன் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications