செம ஸ்பீடு.. பதவி பறித்தவுடன் ராகுல் காந்தி பெயர் மக்களவை இணையதளத்தில் நீக்கம்! ஒருமணி நேரத்திலாம்
டெல்லி: வயநாடு எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், மக்களவையில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நடவடிக்கை எடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அவரது பெயரை தொகுதியுடன் சேர்த்து நீக்கி இருக்கிறார்கள்.
ராகுல் காந்தி காங்கிரஸ் தேசிய தலைவராக இருந்தபோது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்காக கர்நாடகா மாநிலம் கோலாரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டடார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு பின்னால் இருக்கும் "மோடி" என்ற பெயரை குறிப்பிட்டு அவர் விமர்சனம் செய்தார். இதுதான் தற்போதைய பிரச்சனைக்கு காரணம்.

புர்னேஷ் மோடி வழக்கு
ராகுல் காந்தியின் பேச்சால் ஆத்திரமடைந்த குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி அவருக்கு எதிராக சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடியின் சமூகம் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

சூரத் நீதிமன்றம்
சூரத் நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ராகுல் காந்தி மீதான இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா முன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக நேற்று சூரத் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

2 ஆண்டுகள் சிறை
வழக்கை விசாரித்த நீதிபதி வர்மா, ராகுல் காந்தி மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தார். இதனை அடுத்து ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி வர்மா, அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதித்து 30 நாட்கள் ஜாமீனும் வழங்கினார்.

ராகுல் காந்தி பதவி பறிப்பு
தனக்கு விதிக்கப்பட்ட தண்டையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக ராகுல் காந்தி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் காலை மக்களவை நிகழ்வில் வழக்கம்போல் பங்கேற்ற ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போதே அவரது எம்பி பதவி பறிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

சட்டப்படி நீக்கம்
இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை தலைமை செயலாளர் உத்பல் குமார் சிங் அறிவித்து உள்ளார். 2023 மார்ச் 23 ஆம் தேதி வயநாடு எம்பி ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 102(1)(e) மற்றும் 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 இன் கீழ் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ராகுல் காந்தி பெயர் நீக்கம்
நாடாளுமன்ற மக்களவைக்கு என தனியாக அதிகாரப்பூர்வமான இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் உறுப்பினர்களின் பெயர்கள் தொகுதி வாரியாக அதில் இடம்பெற்று இருக்கும். இந்த நிலையில் பதவி பறிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் ராகுல் காந்தியின் பெயர் மக்களவை இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications