பாலியல் குற்றவாளிகளுக்கு பாஜக எப்போதுமே ஆதரவு.. வெட்கமாக இல்லையா பிரதமரே- ராகுல் காந்தி கடும் தாக்கு
டெல்லி: பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பாஜக தரப்பில் அரசியல் செய்வதற்கு வெட்கமாக இல்லையா என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
கடந்த 2002ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத் மாநிலம் வந்த சபர்மதி ரயில், கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் உயிரிழந்தனர். இதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவ அமைப்பினர் குஜராத் முழுவதும் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதலை தொடங்கினர்.
அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, இந்துத்துவ கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்கு பின்னர், வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
“அச்சமின்றி வாழ எனக்கான சுதந்திரத்தை திரும்பக் கொடுங்கள்” - குஜராத் அரசுக்கு பில்கிஸ் பானு கோரிக்கை
பாலியல் குற்றவாளிகள் விடுதலை
கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்தவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது. விடுதலைக்கு பின் வெளியே வந்த குற்றவாளிகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 15 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரும், விடுதலையாகியிருப்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பில்கிஸ் பானு அறிக்கை
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது வாழ்க்கையை சீரழித்த 11 குற்றவாளிகள் விடுக்கப்பட்டனர் என்று கேள்விப்பட்ட போது அதிர்ச்சி ஏற்பட்டது. அவர்களின் விடுதலை, என் அமைதியை பறித்தது மட்டுமல்லாமல் நீதி மீதான நம்பிக்கையையும் அசைத்துவிட்டது. தயவு செய்து விடுதலை உத்தரவை திரும்ப பெறுங்கள். நான் அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை சுதந்திரத்தை திரும்பக் கொடுங்கள் என்று தெரிவித்திருந்தார்.
பாஜக அரசு மீது குற்றச்சாட்டு
இந்த நிலையில் பில்கிஸ் பானு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பாலியல் வழக்கில் பாஜக எம்எல்ஏவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பாஜக அரசு ஆதரவாக செயல்பட்டது. அதேபோல் ஜம்மு காஷ்மீரின் கதுவா வழக்கில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக சார்பாக பேரணி நடத்தப்பட்டது.
பிரதமருக்கு ராகுல் கேள்வி
அதே உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் வழக்கிலும், பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்பட்டது. இவற்றைத்தொடர்ந்து இப்போது குஜராத்திலும், பாலியல் குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்து மரியாதை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற கிரிமினல் குற்றவாளிகளுக்கு பாஜக அரசு ஆதரவளிப்பது, பெண்கள் மீதான அக்கட்சியின் மனநிலையை வெளிச்சம் போட்டுகாட்டுகிறது. இப்படியான அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா பிரதமரே? என்று பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தியின் ட்வீட் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.