நாளை ‘பிரஸ் மீட்’ நடத்தும் ராகுல் காந்தி.. சிறை, தகுதி நீக்கம்.. அடுத்தகட்ட முடிவை அறிவிப்பாரா?
டெல்லி : நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி நாளை பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சூரத் நீதிமன்றம் நேற்று (மார்ச் 23) உத்தரவிட்டது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதால், ராகுல் காந்தி 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்தாலோ, அல்லது குறைத்தாலோ மட்டுமே ராகுல் காந்தியால் தேர்தலில் போட்டியிட முடியும்.
இந்நிலையில், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். "இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்; அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி நாளை பகல் 1 மணியளவில் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications