10 ஆண்டு காயத்துக்கு இன்று மருந்து போட மறக்காதீங்க.. வாக்காளர்களுக்கு ராகுல் வைத்த கோரிக்கை
டெல்லி: கடந்த 10 ஆண்டுகளாக நாட்டின் ஆன்மாவில் ஏற்பட்ட காயத்துக்கு இன்று ஓட்டளித்து மருந்து தடவுங்கள் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதற்கட்ட லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகள் உள்பட இன்று ஒரே நாளில் மொத்தம் 102 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் முதற்கட்ட தேர்லையொட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் மக்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அந்த பதிவில், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் செயல்படுத்துவதாக கூறிய முக்கிய 5 வாக்குறுதிகளின் போட்டோவை அவர் பகிர்ந்துள்ளார்.
அதில் ஏழை குடும்பத்தின் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம், கூலி தொழிலாளர்களின் குறைந்தபட்ச தினசரி சம்பளம் ரூ.400, இளைஞர்களின் அப்ரன்டிஸ்ஷிப்க்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம், சாதிவாரி மற்றும் பொருளாதார ரீதியிலான கணக்கெடுப்பு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்தை சட்ட நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த போட்டோவை பகிர்ந்துள்ள ராகுல் காந்தி அந்த பதிவில், ‛‛இன்று முதற்கட்ட ஓட்டுப்பதிவு.. மக்களே நினைவில் வைத்து கொள்ளுங்கள்.. உங்களின் ஒவ்வொரு வாக்கும் இந்தியாவின் ஜனநாயகத்தையும், அடுத்த தலைமுறைகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க போகிறது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக நம் நாட்டின் ஆன்மாவில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு இன்று ஓட்டு எனும் மருந்து பூசி ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications