கர்நாடகா பார்முலா ஒர்க் அவுட் ஆகுமா? ராஜஸ்தான் முதல்வர் கெலாட்- பைலட் இடையே இன்று கார்கே பஞ்சாயத்து!
டெல்லி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோருடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்துகிறார். ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர்களிடையேயான கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கார்கே இந்த பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.
கர்நாடகாவில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸின் இரு துருவங்களாக இருந்த சித்தராமையா, டிகே சிவகுமர் ஆகியோரை ஒருங்கிணைத்து இணக்கமாக செயல்பட வைத்து வெற்றியை அறுவடை செய்தனர். முதல்வர் பதவி, அமைச்சர் பதவிகள் என ஒவ்வொன்றிலும் இரு தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகளை விடிய விடிய பேசி முடிவுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.

தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் பக்கம் காங்கிரஸ் மேலிடம் கவனத்தை செலுத்தி உள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி வருகிறார். முந்தைய பாஜக அரசு மீதான ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவேன் எனவும் சச்சின் பைலட் மிரட்டல் விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் முட்டி மோதிக் கொண்டிருப்பதால் மேலிடம் அதிர்ச்சியில் உள்ளது. இதனால் இரு தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே. டெல்லியில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரையும் தனித்தனியே சந்தித்து பேசுகிறார் கார்கே.

இதேபோல் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிற சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநில தலைவர்களுடனும் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர்களிடையேயான கருத்து வேறுபாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் கர்நாடகா பார்முலாவை ஒர்க் அவுட் செய்து பார்ப்பதில் கார்கே தீவிரம் காட்டி வருகிறார் என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications