நண்பரிடம் கடன் பெற்று தீபாவளி லாட்டரி வாங்கிய நபர்.. ரூ.11 கோடி முதல் பரிசு விழுந்ததும் செய்த காரியம்
டெல்லி: பஞ்சாபில் தீபாவளி பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.11 கோடியை வென்றுள்ளார் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர். நண்பரிடம் ரூ.1,000 கடன் வாங்கி டிக்கெட்டை வாங்கிய அதிர்ஷ்டாலிக்கு, வாங்கிய இரண்டு டிக்கெட்டுகளுக்கும் பரிசு அடித்துள்ளது. தன் மகள்களின் தோழிகளுக்கு சிறிது பணத்தை வழங்க உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
லாட்டரி டிக்கெட்டுகளால் ஏழை எளிய மக்கள் பணத்தை இழந்து பெரும் கஷ்டத்தில் தவித்ததால் தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் படும் கஷ்டத்தை அறிந்து லாட்டரிகளுக்கு தடையே அமலில் உள்ளது.

ரூ.11 கோடி முதல் பரிசு
எனினும், கேரளா, பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரிகளுக்கு அனுமதி இருக்கிறது. லாட்டரி எனும் சூதாட்டத்தில் பணத்தை இழந்து லட்சக்கணக்கான மக்கள் இன்னல் அடைந்தாலும் யாரோ ஒருவருக்கு பரிசு அடித்து வாழ்க்கையையே புரட்டி போட்டு விடுகிறது. இதனால், அதிர்ஷ்டம் என்றாவது ஒருநாள் நமக்கும் அடித்துவிடாதா? என்ற ஏக்கத்தில் லாட்டரிகளை பலரும் வாங்குகிறார்கள்.
சிலருக்கு பரிசும் விழுந்து ஓவர்நைட்டில் வாழ்க்கையை ஒரே நாளில் தலைகீழாக புரட்டி போட்டு விடுகிறது. அப்படியான ஒரு சம்பவம்தான், பஞ்சாபில் நடைபெற்றுள்ளது. நண்பரிடம் கடன் வாங்கிய பணத்தில் லாட்டரி வாங்கியவருக்கு 11 கோடி ரூபாய் பரிசாக அடித்துள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
நண்பரிடம் கடன் வாங்கி
ராஜஸ்தானின் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்புட்லி கிராமத்தை சேர்ந்தவர் அமித் ஷெரா. இவர் தனிப்பட்ட வேலை காரணமாக பஞ்சாபிற்கு வந்துள்ளார். பஞ்சாபை பொறுத்தவரை கேரளாவை போல லாட்டரிகள் விற்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகையையொட்டி தீபாவளி பம்பர் லாட்டரி டிக்கெட்டை பஞ்சாப் அரசு அறிமுகம் செய்தது. இந்த டிக்கெட் ஒன்றின் விலை ரூ.500 ஆகும்.
முதல் பரிசாக ரூ.11 கோடி இந்த லாட்டரிக்கு வழங்கப்படுகிறது. கடுமையான பணக்கஷ்டத்தில் இருந்த அமித் ஷெராவிற்கு லாட்டரி வாங்க ஆசை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், தன்னிடம் அந்த அளவிற்கு பணம் இல்லை. உடனே தனது நண்பரிடம் பணம் கேட்டு இருக்கிறார். நண்பரிடம் ரூ.1000 கடனாக வாங்கிய அமித் ஷெரா, தனக்கு ஒன்று தனது மனைவிக்கு ஒன்று என இரண்டு லாட்டரிகளை வாங்கியுள்ளார்.
வாழ்க்கையே மாறிவிட்டது
கடன் வாங்கி லாட்டரி வாங்கியிருக்கிறோம்... போட்ட பணமாவது வருமா என்ற எதிர்பார்ப்பில் இருந்த அமித் ஷெராவிற்கு ஓவர் நைட்டில் வாழ்க்கையே மாறிவிட்டது. தீபாவளி பம்பரில் முதல் பரிசாக ரூ.11 கோடி அமித் ஷெராவிற்கு அடித்துள்ளது. லாட்டரி வாங்க கூட பணம் இல்லாமல் இருந்தவர் ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதியாகிவிட்ட அமித் ஷெரா எல்லையில்லா மகிழ்ச்சியில் உள்ளார்.
மகள்களின் தோழிகளுக்கு உதவ இருப்பதாக
தனக்கு பரிசாக கிடைத்த இந்த தொகையை வைத்து சொந்தமாக வீடு கட்ட இருப்பதாகவும், தனது குழந்தைகளின் கல்வி செலவிற்கு செலவிட இருப்பதாகவும் கூறியுள்ளார் அமித் ஷெரா. அதுமட்டுமன்றி தனது மகள்களின் தோழிகள் இருவருக்கு தலா ரூ.50 லட்சம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் இருவருக்கும் தாய் இல்லை. "எனக்கு தாயை இழந்த வலி புரியும். அதனால் அவர்களுக்கு உதவ திட்டமிட்டு இருக்கிறேன்" என்றார்.
பஞ்சாப் லாட்டரி அதிகாரிகள் கூறுகையில், "முதல் பரிசு அடித்த வெற்றியாளர் தனது அசல் லாட்டரி டிக்கெட் மற்றும் தன்னைப் பற்றிய விவரங்களுடன் லாட்டரி அலுவலகத்தை அணுகினால் பரிசுத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications