கொடூரம்! 14 வயது சிறுவன்.. ஆசிரியர் மடியிலேயே மாரடைப்பால் பலி.. கதறும் பெற்றோர்.. என்ன நடந்தது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வெறும் 14 வயதே ஆன சிறுவன் ஒருவன் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மாரடைப்பு என்பது முன்பு வயதானவர்கள், ஏற்கனவே இதய பாதிப்பு இருப்போருக்கு மட்டுமே ஏற்படும் நோயாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. வாழ்க்கை முறை, உணவுப் பழக்கத்தால் அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக கொரோனா பரவலுக்குப் பிறகு சிறியவர்கள், இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துவிட்டது. இந்தியாவிலும் கூட இளைஞர்களிடையே ஏற்படும் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
14 வயது சிறுவன்: அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுவன் கர்தானி நகரில் உள்ள தனது வகுப்பறைக்கு வெளியே சந்தேகத்திற்கிடமான மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த போலீசார் கூறுகையில், "உயிரிழந்த அந்த சிறுவன் பெயர் யோகேஷ் சிங்.. 9ஆம் வகுப்பு மாணவரான அந்த சிறுவன்.. டிசம்பர் 19 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் அவர் வகுப்பறைக்குச் சென்று கொண்டிருந்தபோது திடீரென கிளாஸ் ரூமிற்கு அருகே சரிந்து விழுந்துள்ளார்.
உயிரிழப்பு: பள்ளி நிர்வாகம் அந்த மாணவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது.. அங்கிருந்து அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அங்கே மருத்துவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சிறுவனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது வரை விசாரணையில் தவறாக எதுவும் நடந்தது போல தெரியவில்லை" என்றார்.
இந்த மரணம் மாரடைப்பால் ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அதை உறுதி செய்ய அந்த மாணவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
என்ன நடந்தது: இது குறித்து பள்ளி தரப்பில் கூறுகையில், "அவனிடம் வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை. மற்ற மாணவர்களைப் போல வழக்கம் போலவே பள்ளிக்கு வந்தான். கிளாஸ் ரூம் அருகே ஆசிரியர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கிச் சென்ற மாணவன் திடீரென அவர் மீதே விழுந்துவிட்டான். முதலில் ஆசிரியருக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அதன் பிறகே அவன் மயக்கத்தில் இருப்பது தெரிய வந்தது" என்றார்.
பள்ளி நிர்வாகம் உடனடியாக அவரை மருத்துவச் சிகிச்சைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையிலும் டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
மாரடைப்பால் பலி: அந்த சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. மாணவரின் குடும்ப உறுப்பினர்களும் இதில் எந்தவொரு சந்தேகத்தையும் கிளப்பவில்லை. மாணவருக்கு ஏற்கனவே எதாவது உடல்நல பாதிப்பு இருந்ததா என்ற கோணத்திலும் இப்போது விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவுக்கு பிறகு இளைஞர்களிடையே மாரடைப்பு அதிகரிக்கும் நிலையில், தீவிர கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குத் தீவிர உடற்பயிற்சியை அல்லது அதீத வேலையைச் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications