7 தமிழர் விடுதலை..முடிவு எடுக்காத ஆளுநர் பன்வாரிலால்..உச்சநீதிமன்றத்தில் பிப்.9-ல் மீண்டும் விசாரணை
டெல்லி: 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் முடிவு எடுக்காத நிலையில் வரும் 9-ந் தேதி இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசு நிலைப்பாடு. இது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை 3 ஆண்டுகளாக கிடப்பில் வைத்திருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால்.
இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனாலும் ஆளுநர் தரப்பில் பல்வேறு விளக்கங்கள்தான் தரப்பட்டன. உச்சநீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தலையிட்டது. 12 நாட்களில் ஆளுநர் முடிவெடுத்தாக வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடுபிடி காட்டியது.
ஆனாலும் ஆளுநர் தரப்பில் இருந்து எந்த முடிவும் எடுக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்று மட்டும் கூறியிருந்தார்.
7 தமிழர் விடுதலை- ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்: சட்டசபையில் முதல்வர் எடப்பாடியார் நம்பிக்கை
இந்நிலையில் 7 தமிழர் விடுதலை தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் பிப்.9-ந் தேதியன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் உச்சநீதிமன்றம் 7 தமிழர் விடுதலையில் முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்குமா? என்பது தமிழகத்தின் எதிர்பார்ப்பு.