ராஜிவ் காந்தி படுகொலைக்கு பாஜக காரணம்.. அகமது பட்டேல் பகீர் குற்றச்சாட்டு
Recommended Video
டெல்லி: பாஜகவின் வெறுப்பால்தான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்று, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது பட்டேல் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ட்விட்டர் தளத்தில் அகமது பட்டேல் கூறியுள்ளதை பாருங்கள்: வீரமரணமடைந்த ஒருவரை அவமானப்படுத்துவது, உச்சபட்ச கோழைத்தனத்தின் அடையாளம். ஆனால், அவரது படுகொலைக்கு யார் பொறுப்பு? விபி சிங் அரசுக்கு அப்போது பாஜக ஆதரவு அளித்துக்கொண்டிருந்தது. ராஜீவ் காந்தி உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி உளவுத்துறை அறிக்கைகள் கிடைத்த பிறகும் கூட, கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்கு விபி சிங் அரசாங்கம் மறுத்தது.
இதன் பின்னணியில் பாஜக இருந்தது. எனவே ஒரே ஒரு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி (PSO), பாதுகாப்புடன்தான், ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டி வந்தது. உங்களது வெறுப்பின் காரணமாகத்தான் ராஜீவ் காந்தி அவரது உயிரையே இழக்க நேரிட்டது. அடிப்படை, ஆதாரமற்ற உங்களது குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதற்கு அவர் தற்போது நம்மிடம் இல்லை. இவ்வாறு அகமது படேல் தெரிவித்துள்ளார்.
Abusing a martyred Prime Minster is the sign of ultimate cowardice
— Ahmed Patel (@ahmedpatel) May 9, 2019
But who is responsible for his assassination ?
The BJP backed VP Singh govt refused to provide him with additional security & left him with one PSO despite credible intelligence inputs and repeated requests
முன்னதாக ராஜீவ் காந்தி நம்பர் ஒன் ஊழல் குற்றவாளியாகத்தான் மறைந்தார், என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலை ராஜீவ் காந்தி தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு பயன்படுத்தினார், என்று, புதிதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார் நரேந்திர மோடி.
Rajiv ji lost his life due to their hatred & is no longer here amongst us to answer the baseless allegations & abuses which are being unleashed on him
— Ahmed Patel (@ahmedpatel) May 9, 2019
தொடர்ச்சியாக ராஜீவ் காந்தி தொடர்பான வாத விவாதங்கள் அரசியலில் சூட்டை கிளப்பியுள்ள நிலையில், அவரது படுகொலைக்கு, பாஜகவின் வெறுப்புதான் மறைமுகக் காரணம் என்று அகமது பட்டேல் தெரிவித்துள்ளது புது விவாதத்தை கிளப்பியுள்ளது.
1991 ஆம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி, தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில், தேர்தல் பிரச்சாரத்தின்போது, மனித வெடிகுண்டு தாக்குதலால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.