மோடி அரசின் நம்பர் 2 யார் என்று நீடிக்கும் போட்டி.! மத்திய அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டிய ராஜ்நாத்
Recommended Video
டெல்லி: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் நேற்று மத்திய அமைச்சர்கள் சிலரை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத கூட்டமாக நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவிலும், மற்ற அமைச்சரவை குழுக்களிலும் ராஜ்நாத் சிங் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த அதிகாரப்பூர்வமற்ற மத்திய அமைச்சர்களின் கூட்டத்தை அவர் நடத்தியுள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி அமைச்சரவை குழுக்களை மூன்று நாட்களுக்கு முன் மாற்றியமைத்தார். இதில் உள்துறை அமைச்சரான அமித்ஷா கிட்டத்தட்ட 8 அமைச்சரவை குழுக்களில் இடம் பெற்றிருந்தார். ஆனால் பாதுகாப்பு துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கிற்கு, இரு அமைச்சரவை குழுக்களில் மட்டுமே இடமளிக்கப்பட்டிருந்தது.
பிரதமருக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடிப்பது யார் என்ற போட்டி அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் இடையே நிலவி வந்ததாக கூறப்பட்ட நிலையில், இதில் அதிக அமைச்சரவை குழுக்களில் அமித் ஷாவிற்கு இடமளிக்கப்பட்டதால் ராஜ்நாத் சிங் கடும் அதிருப்தியடைந்தார்.
இதனால் அமித் ஷா தான் மோடி அரசில் நம்பர் 2 என்று சொல்லாமல் சொல்லப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இது தன்னை அவமதிக்கும் செயலாகும் என ராஜ்நாத் சிங் கடும் ஆத்திரமடைந்தததாக கூறப்பட்டது.
ஒருகட்டத்தில் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக, ராஜ்நாத் ஆதங்கம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால் இத்தகவலை பாதுகாப்பு துறை அமைச்சகம் மறுத்தது. எனினும் இதனையறிந்த மோடி, ராஜ்நாத்தை சமாதானப்படுத்த அவரையும் மத்திய அமைச்சரவை குழுக்களில் இணைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
இதனையடுத்து மோடி மீண்டும் அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்தார். இதன் பின்னர் மொத்தம் 6 அமைச்சரவை குழுக்களில், ராஜ்நாத் சிங் இடம் பிடித்தார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறைகளின் அமைச்சரவை குழுக்களில் மட்டுமின்றி, கூடுதலாக பொருளாதார வளர்ச்சி, முதலீடு, வேலை வாய்ப்பு, மற்றும் திறன் வளர்ப்பு உள்ளிட்ட 4 அமைச்சரவைகளுக்கான துணை குழுக்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் ராஜ்நாத் சிங் பெயர் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் அதிகாரப்பூர்வமற்ற மத்திய அமைச்சர்கள் கூட்டத்திற்கு ராஜ்நாத் சிங் நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் விரைவில் கூட உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் பின்பற்றப்பட வேண்டிய உத்திகள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இரண்டாவது முறையாக மோடி பதவியேற்ற பிறகு இத்தகைய மத்திய அமைச்சர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதலாவது நபர் ராஜ்நாத் சிங் ஆவார். ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்திருந்த இந்த அதிகாரப்பூர்வமற்ற அமைச்சர்கள் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications