ராஜ்யசபா வரலாற்றில் இதுவே முதல்முறை.. ஒரே அமர்வில் அதிக எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் ராஜ்யசபாவில் 19 எம்பிக்கள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் அதிக எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்ற சாதனையை நேற்றைய அவை படைத்து இருக்கிறது.
கடந்த வாரம் தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக நாடாளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வந்தன.

எதிர்க்கட்சிகள்
பண வீக்கம், பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன.

லோக்சபா
நாடாளுமன்ற லோக்சபாவில் இடையூறு ஏற்படுத்தியதாக எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் உள்ளிட்ட 4 பேரை சபாநாயகர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்து கடந்த செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். 4 பேரும் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்கவும் சபாநாயகர் தடை விதித்தார்.

19 எம்பிக்கள்
இந்நிலையில் நேற்று ராஜ்யசபாவில் என்.ஆர்.இளங்கோவன், சண்முகம், கிரிராஜன், எம்.எம்.அப்துல்லா, கனிமொழி சோமு, கல்யாணசுந்தரம் ஆகிய 6 திமுக எம்பிக்கள், திரிணாமுல் காங்கிரஸின் 7 எம்பிக்கள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் 3 எம்பிக்கள், 2 சிபிஎம், ஒரு சிபிஐ எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இந்த வாரம் முழுவதும் ராஜ்யசபாவின் நடவடிக்கையில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறை
இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வரலாற்றில் முதல் முறை என்ற சாதனையை இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் மாநிலங்களவையில் இவ்வளவு பேர் சஸ்பெண்ட் செய்வது இதுவே முதல்முறை. அதேநேரம் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 45 எம்.பிக்களை லோக்சபாவில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து அவைத் தலைவர் பியூஷ் கோயல் தெரிவிக்கையில், கனத்த இதயத்துடன் இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications