ராஜ்யசபா தேர்தல்..இலவு காத்த கிளிகளாக மநீம கமல்ஹாசன், தேமுதிக விஜய பிரபாகரன்.. வைகோ சகாப்தம் முடிவு?
டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலம் முடிவடைவதால் ஜூன் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், அதிமுக கூட்டணியில் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர்.
ராஜ்யசபா எம்பி பதவி காலம் 6 ஆண்டுகள். தற்போது ராஜ்யசபா எம்பிக்களாக இருக்கும் திமுக கூட்டணியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் புதுக்கோட்டை அப்துல்லா, வில்சன், சண்முகம் மற்றும் அதிமுகவின் சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோரது பதவி காலம் முடிவடைகிறது. இதனையடுத்து ஜூலை மாதம் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது.

வைகோவின் நாடாளுமன்ற சகாப்தம் முடிவுக்கு வரும்?
திமுக கூட்டணியில் வைகோவுக்கு மீண்டும் எம்பியாகும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறிதான் என கூறப்படுகிறது. வைகோவின் மகன் துரை வைகோ லோக்சபா எம்பியாக இருக்கும் நிலையில் வைகோவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை திமுக தலைமை தருமா? என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர். வைகோவின் இடத்தை மற்றொரு கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசனுக்கு திமுக தலைமை கொடுக்கக் கூடும்; லோக்சபா தேர்தலின் போது திமுக கூட்டணியில் மநீம இணைந்த போதே, கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா சீட் உறுதியளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனால் வைகோவின் நாடாளுமன்ற அரசியல் சகாப்தம் முடிவுக்கு வரக் கூடும்.
தொமுச
திமுகவின் புதுக்கோட்டை அப்துல்லா, வில்சன் இருவருமே மீண்டும் ராஜ்யசபா எம்பி சீட்டைப் பெற தீவிரமாக முயற்சிக்கக் கூடும்; தொமுச சண்முகத்துக்கு பதிலாக தொமுசவைச் சேர்ந்த மற்றொரு நிர்வாகிக்கு ராஜ்யசபா எம்பி பதவியை திமுக தலைமை வழங்கக் கூடும்.
அன்புமணிக்கு வாய்ப்பே இல்லை
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரையில் 2019-ம் ஆண்டு பாமக, பாஜக ஆகியவை இடம் பெற்றிருந்தன; அதனால் பாஜகவின் நெருக்கடியால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு ஒரு சீட்டை அதிமுக தாரைவார்த்து கொடுத்தது. தற்போது அன்புமணி ராமதாஸின் பாமக, பாஜக கூட்டணியில் நீடிக்கிறது. இந்த நிலையில் அன்புமணி மீண்டும் ராஜ்யசபா எம்பியாக வாய்ப்பு இல்லை. அதிமுகவின் 2 எம்பி பதவிகளும் மேற்கு மற்றும் தென் மண்டல அதிருப்தி தலைவர்களில் ஒருவருக்கு கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
விடாது கறுப்பாய் துரத்தும் தேமுதிக
அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் விடாமல் கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் தேமுதிக, இந்த முறை வாய்ப்பை நழுவ விடாது என்றே தெரிகிறது. தேமுதிகவின் பல்லாண்டு கால கனவுதான் ராஜ்யசபா சீட். எந்த கட்சியுடன் கூட்டணி பேசினாலும் ராஜ்யசபா சீட்டை பேரப் பொருளாக தேமுதிக வைக்காமல் இருந்ததும் இல்லை. இதனால் அதிமுக தலைமையில் பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் இல்லாத நிலையில் தொடர்ந்து கூட்டணியில் நீடிக்கிறோமே... என்பதை காரணம் காட்டியாவது எப்படியாவது ராஜ்யசபா சீட்டைப் பெறுகிற முயற்சிகளில் தீவிரமாகி இருக்கிறாராம் பிரேமலதா விஜயகாந்த். தேமுதிகவில் மகன் விஜய பிரபாகரன் அல்லது சகோதரர் சுதீஷ் ஆகியோரில் ஒருவருக்குதான் ராஜ்யசபா சீட்டை பிரேமலதா கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.
தற்போதைய நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இருந்து ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்துக்குள் நுழைவது உறுதி என்பது தெளிவாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications