ராஜ்யசபா வரலாற்றில் முதல் முறை.. ரஞ்சன் கோகாய் எம்.பி.யாக பதவியேற்றபோது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
டெல்லி: ராஜ்யசபா எம்பியாக, ரஞ்சன் கோகாய் பதவி பிரமாணம் செய்தபோது, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் எதிர்ப்பு கோஷமிட்டனர். அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அப்பதவியில் இருந்தபோது, அயோத்தி நிலம் தொடர்பான சர்ச்சை, ரபேல் போர் விமான பேரம் உள்ளிட்ட சில முக்கியமான வழக்குகளில் தீர்ப்பளித்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பணி ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவிக்கு ரஞ்சன் கோகாய் பெயரை நேற்று பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர் இன்று பதவியேற்றார். ஆனால் கோகாய் பதவி பிரமாணம் செய்தபோது, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் எதிர்ப்பு கோஷமிட்டனர். அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ராஜ்யசபா எம்.பி.யாக ஒருவர் பதவியேற்கும்போது, எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வது இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. நீதித்துறையின் சுதந்திரம் இதுபோன்ற நியமனங்களால் பாதிக்கப்படும் என்பது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டாக உள்ளது.

முன்னதாக, அசாம் டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ரஞ்சன் கோகாய், பலமான நாட்டை கட்டமைப்பதற்காக ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் நீதித்துறையும், நாடாளுமன்றமும், ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்ற பலமான நம்பிக்கை எனக்கு இருப்பதால்தான் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.
நாடாளுமன்ற, உறுப்பினராக நான் இருப்பதால் நீதித்துறையின் கருத்துகளை நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றம் கருதுவதை நீதித்துறை சார்ந்தவர்களிடமும் என்னால் முன்வைக்க முடியும் என்று அவர் விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications