முக்கிய மசோதாக்கள் ராஜ்யசபா வராமலே நிறைவேறுகின்றன.. சுட்டிக் காட்டி பேசிய மன்மோகன்சிங்
டெல்லி: ராஜ்யசபா மாண்பு காக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வலியுறுத்தினார்.
ராஜ்யசபாவின் 250வது அமர்வையொட்டி, இன்று பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் சிறப்புரையாற்றினர். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும், இன்றைய அமர்வில் உரை நிகழ்த்தினார்.
மாநிலங்களவையில் இன்று, பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மேல் சபையின் பங்கைக் குறைவாக மதிக்கக்கூடாது, மேலும் மசோதாக்களைப் படிப்பதற்கும் விவாதிப்பதற்கும் அதிக நேரம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"16 வது லோக்சபா பதவி காலத்தில், 15 மற்றும் 14 வது லோக்சபா பதவி காலத்தை ஒப்பிடும்போது 25% மசோதாக்கள் மட்டுமே கமிட்டிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. மசோதாக்கள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டிகளை உருவாக்குவது இந்த சபைக்கு முக்கியமானது," என்று மன்மோகன் சிங் கூறினார்.
நிதி மசோதாக்கள் பல, ராஜ்யசபா வராமலேயே, அவசர வழியில், நிறைவேற்றப்படுவதை சமீபகாலமாக பார்க்கிறோம். கருவூலத்தில் இருப்பவர்கள், இப்படியான குறுக்குவழிகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்ட மசோதாக்களை மேலும் வலுவாக்குவதிலும், மெருகேற்றுவதிலும், ராஜ்யசபா மிகுந்த முக்கியமானது. எனவே, அனைத்து சட்ட மசோதாக்களும், ராஜ்சயசபா வழியாகவே செல்ல வேண்டும். இதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை.
நமது முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு முயற்சிகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், ராஜ்யசபா இந்த அளவுக்கு அதிகாரங்களை பெற்றிருக்காது. மக்களவையும், மாநிலங்களவையும் இணைந்து செயல்படாவிட்டால், நமது அரசியல் சாசனத்திற்குத்தான் அது குந்தகத்தை ஏற்படுத்தும்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை விலக்குவது முக்கியமான முடிவு. அதற்கு முன்பாக, மாநிலங்களவையில், அதுகுறித்து அரசு ஆலோசித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.