பேருக்குதான் கூட்டத்தொடரா? சி.பி.ராதாகிருஷ்ணனை நோக்கி எழுந்த கேள்வி! மாநிலங்களவையில் சலசலப்பு!
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று ஒரே ஒரு கேபினட் அமைச்சர் கூட இல்லாததால், குடியரசுத் துணை தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான சி.பி.ராதாகிருஷ்ணனை நோக்கி எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனையடுத்து அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத் தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், அவையில் ஒரு கேபினட் அமைச்சர் கூட இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இது சபைக்கு இழைக்கப்பட்ட அவமானம் எனக் கூறி, உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மாநிலங்களவை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணன் இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார்.

இந்த சிக்கல் குறித்து அரசாங்கத்திடம் விவாதிப்பதாக சபாநாயகர் ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார். மூத்த அமைச்சர் ஒருவரை வரவழைக்குமாறு ஒரு இளநிலை அமைச்சரை அவர் அறிவுறுத்தினார். "நடைமுறைகள் எனக்குத் தெரியும். அமைச்சரிடம் கோரப்பட்டுள்ளது. கேபினட் அமைச்சர்களில் ஒருவர் வர வேண்டும்" என ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். ஆனால் உடனடியாக அமைச்சர் யாரும் வரவில்லை.
எனவே டென்ஷன் ஆன எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர் வரும் வரை அவை நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். "இது அவைக்கு அவமானம். கேபினட் அமைச்சர் வரும் வரை அவையை ஒத்திவைக்க வேண்டும்" என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார்.
ஐந்து நிமிடங்கள் காத்திருந்த பிறகும் அமைச்சர் யாரும் அவைக்கு வராததால், சி.பி. ராதாகிருஷ்ணன் அவை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications