விவசாயிகள் போராட்ட பின்னணியில் பாகிஸ்தான்,சீனா... மத்திய இணை அமைச்சரின் கருத்தால் வெடித்த சர்ச்சை..!
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் பின்னணியில் பாகிஸ்தானும், சீனாவும் உள்ளதாக கூறியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் ராவ் சாகேப் டான்வி.
மத்திய இணை அமைச்சர் ராவ் சாகேப்பின் இந்தக் கருத்து விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரி 14-வது நாளாக வாட்டி வதைக்கு குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயப் பெருங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தன்னெழுச்சியாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஒருவரே கூறியிருப்பது விவசாயிகளை வேதனைக் கொள்ளச் செய்துள்ளது.
இதனிடையே கடந்தவாரம் ஹரியானா பாஜக அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலால், இந்தியாவின் உறுதித்தன்மையை குலைக்க பாகிஸ்தானும், சீனாவும் விவசாயிகள் மூலம் முயல்வதாக கூறியிருந்தார். இப்போது மற்றொரு அமைச்சர் அதைப் போன்ற ஒரு கருத்தை முன் வைத்துள்ளார்.
விவசாயிகளிடம் வீராப்பு காட்டாமல்... இடைக்கால நிவாரணத்தை வழங்கிடுக... ஸ்டாலின் வலியுறுத்தல்
இதனிடையே விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதை உணர்ந்துள்ள மத்திய அரசு பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இரண்டு மணி நேரம் நடத்திய ஆலோசனையில் முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.