இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் 2 வகையான கொரோனா பரிசோதனைகளுக்கு ஏற்பாடு!
டெல்லி: கொரோனா பரவல் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே 2 வகையான பரிசோதனைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பால் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 நாடுகளில் ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை. டெல்டா வகை வைரஸைவிட இது மிக அதிகவேகமாக பரவக் கூடியது.
மேலும் ஓமிக்ரான் கொரோனா பரவல் உள்ள நாடுகளான ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகியவற்றில் இருந்து வருவோருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனைகளை அதிகரிக்கவும், கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், சுகாதார வசதிகளை அதிகரிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்திருக்கிறது.
தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றனர். நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் வழக்கமான பரிசோதனை, விரைவான பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு PT-PCR பரிசோதனை மேற்கொள்ள ரூ500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. PT-PCR பரிசோதனை முடிவுகள் 5 அல்லது 6 மணிநேரத்தில் கிடைத்துவிடும். விரைவான கொரோனா பரிசோதனை முடிவுகளைப் பெற ரூ3,900 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பரிசோதனை முடிவுகள் ஒரு மணிநேரத்தில் கிடைத்துவிடும். கொரோனா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் விரைவான பரிசோதனை மேற்கொள்ள ரூ4,000 செலுத்த வேண்டும். வழக்கமான பரிசோதனை மேற்கொள்ள ரூ900 கட்டணம் செலுத்த வேண்டும்.
கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து மும்பைக்கு வரும் பயணிகள் கட்டாயமாக ஒரு வாரம் குவாரண்டைன்- தனிமைப்படுத்தப்படுவர். இந்த கால கட்டத்தில் 3 வகையான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இப்பரிசோதனைகள் மும்பைக்கு வருகை தந்த பின்னர் 2-வது, 4-வது மற்றும் 7-வது நாட்களில் மேற்கொள்ளப்படும். அனைத்து பரிசோதனைகளிலும் நெகட்டிவ் என வந்தாலும் வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
Recommended Video
பெங்களூரு விமான நிலையத்தில் விரைவான கொரோனா பரிசோதனை செய்து கொள்ள ரூ3,900 செலுத்த வேண்டும். வழக்கமான கொரோனா பரிசோதனைக்கு ரூ500 செலுத்த வேண்டும்.