காலிஸ்தான் பிரிவினைவாதி மீது கொலை முயற்சி! அமெரிக்கா குற்றம் சாட்டிய முன்னாள் ரா ஏஜென்ட் கைது!
டெல்லி: அமெரிக்காவில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாதியை கொல்ல முயற்சி நடந்த சம்பவத்தில் முன்னாள் ரா (R&AW) ஏஜென்ட் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்கா இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இந்நிலையில் அவர் தற்போது டெல்லியில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான பிரிவினைவாத அமைப்பினர் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இயங்கி வருகிறார்கள். காலிஸ்தானி பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவரும் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து தீவிரமாக செயல்பட்டு வந்திருந்தார். இதனை கவனித்து வந்த இந்தியா, பிரிவினைவாத செயல்களை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்து வந்தது. ஆனால், பன்னுன் தனது சதி வேலைகளை தொடர்ந்து வந்தார்.

இதனையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்தது. மறுபுறம் அவரை போட்டு தள்ள ரா ஏஜென்ட் விகாஸ் யாதவ் என்பவர் முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, அமெரிக்காவில் லோக்கல் ரவுடி ஒருவர் உதவியுடன் இதனை செய்ய அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் அணுகிய ஆள் உண்மையில் லோக்கல் ரவுடி கிடையாது. அவர் அமெரிக்க உளவுத்துறையின் இன்ஃபார்மர். எனவே இந்த விஷயம் FBI காதுக்கு எட்டியது.
சம்பவம் தொடர்பாக விசாரணையில் இறங்கிய FBI, பன்னுனை கொல்வதற்கு பெரும் தொகை ஒன்றை விகாஸ் யாதவ் கைமாற்றியிருக்கிறார் என்பதை கண்டுபிடித்தது. இதனையடுத்து அவர் மீது கெலை முயற்சி, கூலிப்படையை வைத்து கொலை செய்வது, பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தொடங்கியது. இதற்கிடையில் யாதவ் அங்கிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டார்.
விசாரணையை முடித்த FBI, விகாஸை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நோட்டீஸை வெளியிட்டது. தொடக்கம் முதல் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்து வந்த நிலையில், தற்போது பெரிய அளவுக்கு எதிர்ப்பு காட்டவில்லை. FBIஐ நோட்டீஸ் குறித்து பதிலளித்த இந்தியா, விகாஸ் யாதவ் தற்போது இந்தியாவுக்காக வேலை செய்யவில்லை என்று கைவிரித்துள்ளது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டு சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், டெல்லியில் வைத்து இன்று விகாஸ், சிறப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். விசாரணைக்கு பின்னர் அவர் விடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. FBI குற்றச்சாட்டை பொறுத்த வரையில் இரண்டாவது குற்றவாளியாகவே விகாஸ் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றிய விகாஸ், ஆயுதங்களை கையாள்வதில் மிகவும் திறமையுடையவராய் இருந்திருக்கிறார். மேலும் போர் கலையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
ஏற்கெனவே கனடாவில் காலிஸ்தான் தலைவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவின் தூதரக அதிகாரிகள் மீது, அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியிருந்தது. தற்போது இந்திய உளவுத்துறை அதிகாரி கொலை முயற்சி குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது பேசு பொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications