ரெப்போ வட்டி விகிதம் மூன்றாவது முறையாக 0.5% குறைப்பு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
டெல்லி: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ விகிதம்) தற்போது மூன்றாவது முறையாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரெப்போ விகிதம் 6%ல் இருந்து 5.5% ஆக குறைந்திருக்கிறது.
ஏற்கெனவே இந்த ஆண்டு பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் 0.5% குறைக்கப்பட்டிருந்தது. இப்போது இதனை தொடர்ந்து ஜூன் மாதத்திலும் வட்டி விகிதம் 0.5% குறைக்கப்பட்டிருக்கிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

ஏன் ரெப்போ விகிதம் குறைக்கப்படுகிறது?:
பணவீக்கத்தை கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் பொருளாதாரத்தில் போதிய வளர்ச்சி இல்லை என்கிற சூழலில் விகிதம் குறைக்கப்படும். உதாரணமாக கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் ரெப்போ விகிதம் 115 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் ரெப்போ விகிதம் 5.15% இலிருந்து 4.40% ஆகவும், பின்னர் 4.00% ஆகவும் குறைக்கப்பட்டது. இதனால் வங்கிகளுக்கு குறைந்த வட்டியில் பணம் கடனாக கொடுக்கப்பட்டது. வங்கிகளும் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடனை கொடுத்தன.
இப்போது ஏன் குறைக்க வேண்டும்?
சரி இப்போதுதான் கொரோனா தொற்று இல்லையே, இப்போது ஏன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது? என்று கேள்வி எழலாம். காரணம் சமீபத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் துறை வாரியான வளர்ச்சி குறித்த தரவுகள் வெளியாகின. அதில் உற்பத்தி, சேவை துறையில் வளர்ச்சி குறைந்திருந்ததாகவும், 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் மொத்த GDP சரிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது 2024-2025ம் ஆண்டில் மொத்த வளர்ச்சி 6.5ஆக பதிவாகியிருந்தது.
இந்த சரிவை மீட்கவும், உற்பத்தி மற்றும் சேவை துறையில் விழுந்த அடியை சரி செய்யவும் தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் மீண்டும் வங்கிகளுக்கு குறைந்த வட்டியில் ஆர்பிஐ கடன் வழங்கும். வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதேபோல குறைந்த வட்டியில் கடனை கொடுக்கும். அதேபோல வீடு, கார் உள்ளிட்டவற்றிற்காக கடன் வட்டி விகிதம் குறையும். எனவே EMI குறையவும் வாய்ப்பு இருக்கிறது.
நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆனால், இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாத என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். அதாவது ஒரு காலத்தில் 'கிராஸ் சப்சிடி' என்கிற முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதாவது பெரிய நிதி நிறுவனங்களிடமிருந்து சிறிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் கடன் வாங்கும். இதனால் பெரும் நிறுவனங்களுக்கு வட்டி கிடைக்கும். அதை வேறு இடத்தில் இந்த நிறுவனங்கள் முதலீடு செய்யும்.
இப்போது இந்த நிலைமை மாறியிருக்கிறது. சாமானிய மக்களுக்கு கடன்களை கொடுத்து அதற்கு அதிக அளவில் வட்டியை பெற்று நிதி நிறுவனங்கள் லாபம் ஈட்ட தொடங்கியுள்ளன. சூழல் இப்படி இருப்பதால் ரெப்போ விகிதம் குறைத்திருப்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications