ஹேப்பி நியூஸ்.. வீட்டு கடன்களுக்கான இஎம்ஐ சலுகை.. மேலும் 3 மாதம் நீட்டிக்க வாய்ப்பு!
டெல்லி: வீட்டுக் கடன்களுக்கான மாதத் தவணையை 3 மாதங்களுக்கு தள்ளி வைத்து வழங்கப்பட்டுள்ள சலுகையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பது குறித்து ரிசர்வ் வங்கி யோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு தற்போது மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டுக் கடன்களுக்கான மாத் தவணையை மேலும் 90 நாட்களுக்கு அதாவது 3 மாதங்களுக்கு நீட்டிக்கலாமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி யோசித்து வருகிறதாம்.
கொரோனா பரவல் காரணமாக நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வீட்டுக் கடன் மாதத் தவணையை 3 மாதத்திற்கு தள்ளி வைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. தற்போது இதை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பது குறித்து ரிசர்வ் வங்கி யோசித்து வருகிறதாம். இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது வழங்கப்பட்டுள்ள 3 மாத சலுகைத் திட்டம் மே 31ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் இது போதாது என்றும் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளதால் ரிசர்வ் வங்கி நீட்டிப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு வங்கிகளும் கூட இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த முடிவையும் எடுக்கவில்லை. இருப்பினும் நேற்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் தலைமை செயலதிகாரிகளுடன் ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின்போது மாதத் தவணை சலுகை குறித்தும் அவர் விவாதித்ததாக தெரிகிறது.
Recommended Video
கொரோனா பாதிப்பு நாட்டில் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. பெரும்பாலான பகுதிகள் சிவப்பு மண்டலத்தின் கீழ்தான் வருகின்றன. எனவே அனைவருமே வீட்டுக் கடன்களுக்கான மாதத் தவணையை கட்ட முடியாமல் சிரமத்தில் உள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.