சர்ச்சை! இலவசங்களால் வரும் சிக்கலை பட்டியலிட்டு! மத்திய அரசை ஆமோதிக்கும் ரிசர்வ் வங்கி உறுப்பினர்
டெல்லி: இலவசங்கள் குறித்து நாடு முழுவதும் பெரியளவில் விவாதம் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு உறுப்பினர் ஆஷிமா கோயல் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த சில நாட்களாகவே இலவசங்கள் தான் நாடு முழுவதும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரமதர் நரேந்திர மோடி கூட இலவசங்கள் எதுவும் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படாது என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதேநேரம் தமிழகத்தில் இருந்து பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் இலவசங்களால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கைத் தரம் முன்னேறி உள்ளதாகப் புள்ளி விவகாரங்கள் உடன் விளக்கி வருகின்றனர்.

ஆஷிமா கோயல்
இந்தச் சூழலில் இலவசங்கள் ஒருபோதும் இலவசம் என்றும் அரசியல் கட்சிகள் அத்தகைய திட்டங்களை வழங்கும்போது அதற்குப் பெரியளவில் நிதி செலவிட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு உறுப்பினர் ஆஷிமா கோயல் தெரிவித்தார். மேலும், இது சந்தை பொருளாதாரத்தில் இருக்கும் போட்டியைக் குறைக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலவசங்களே இல்லை
இது தொடர்பாக ஆஷிமா கோயல் மேலும் கூறுகையில், "அரசின் திட்டங்கள் எதுவும் உண்மையில் இலவசங்கள் இல்லை. இதுபோன்ற இலவசத் திட்டங்களை அரசு அறிவிக்கும் போது, அதற்கான செலவை அரசு தான் எங்காவது சமன் செய்ய வேண்டும். இதற்குப் பதிலாக அனைத்து தரப்பு மக்களும் உதவும் வகையிலான திட்டங்களை முன்னெடுக்கலாம். மேலும், சந்தையில் விலைவாசிகளைக் குலைக்கும் இதுபோன்ற மானியங்கள் தீங்கு விளைவிக்கும்.

பாதிக்கும்
இது உற்பத்தி மற்றும் வள ஒதுக்கீட்டையும் பாதிக்கிறது. மேலும், அரசின் மறைமுக செலவும் இதன் காரணமாக உயர்கிறது. இலவச மின்சாரத்தால் பஞ்சாபில் நீர்மட்டம் வீழ்ச்சி அடைந்ததை நாம் மறந்துவிடக் கூடாது. இதுபோன்ற திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்குவதால் சுகாதாரம், கல்வி, நீர் மேலாண்மைக்கு அரசு குறைவான நிதியைச் செலவிடுகிறது. இதில் பெரிதும் பாதிக்கப்படுவது என்னவோ ஏழை மக்கள் தான்.

விளக்க வேண்டும்
கட்சிகள் இதுபோன்ற இலவசத் திட்டங்களை வழங்கும்போது, இதுபோன்ற திட்டங்களுக்கு எங்கிருந்து நிதியை எடுக்கிறார்கள் என்பதை வாக்காளர்களிடம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். சந்தையில் பொருட்களின் விலையிலும் கூட எதிரொலிக்கும்" என்று அவர் தெரிவித்தார். ஆம் ஆத்மி, திராவிட கட்சிகள் உள்ளிட்ட பல பிராந்திய கட்சிகள் பொதுமக்களுக்கு இலவசங்களை அறிவிக்கும் நிலையில், இதைச் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாடியிருந்தார். இந்தச் சூழலில் ரிசர்வ் வங்கி முக்கிய அதிகாரி ஒருவரே இப்படிக் கூறி உள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

வளர்ச்சி
தொடர்ந்து இந்தியாவின் வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், "சர்வதேச நிகழ்வுகள் வட்டி விகித உயர்வுகள் தொடர்ந்தாலும் கூட இந்தியாவின் வளர்ச்சி நீடித்து வருகிறது. மற்ற நாடுகள் உடன் ஒப்பிடும்போது, எதிர்பார்ப்புகளைக் காட்டிலும் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்பட்டு உள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட பொருளாதாரமே இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

பன்முகத்தன்மை
நாட்டின் பெரிய உள்நாட்டுத் தேவை சர்வதேச மந்தநிலை பாதிப்பை நாட்டில் குறைக்கிறது. நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த போது, விவசாயம் பொருளாதாரத்தைக் காப்பாற்றியது. டிஜிட்டல் மயமாக்கல், வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை ஆகியவையும் ஊரடங்கு காலத்தில் பெரியளவில் உதவியது. சீனாவில் இருந்து வரும் முதலீடு, இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் ஏற்றுமதியை மேம்படுத்த அரசு எடுத்த முயற்சிகளும் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்து. இன்னும் கூட சர்வதேச அளவில் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்கலாம்.

பணவீக்கம்
பணவீக்கம் குறைந்து வருகிறது. கொரோனாவுக்கு பிறகு பொருளாதாரம் மெல்ல மீண்டும் வரும் நிலையில், அரசு இப்போது எடுக்கும் நடவடிக்கைகள் பணவீக்கத்தை மெல்லக் குறைக்க உதவும். அமெரிக்கா வட்டியை உயர்த்துவதால் டாலர் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. ஆனால், ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகளால் மற்ற நாடுகள் உடன் ஒப்பிடும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு பெரியளவில் வீழவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications