"பணமதிப்பு நீக்கம் ஞாபகம் இருக்கா பிரதமரே?" கள்ள நோட்டுகள் விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சுளீர்
டெல்லி: கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வாங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் ஆண்டறிக்கையை வெளியிடும். அதன்படி இந்த ஆண்டும் ஆண்டறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருந்தது.
இந்த ஆண்டு ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் கள்ள நோட்டுகள் குறித்த தரவுகள் கூறப்பட்டு இருந்தது. இதைக் குறிப்பிட்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன், பணமதிப்பு நீக்கம் நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசைச் சாடியுள்ளார்.

கள்ள நோட்டுகள் அதிகரிப்பு
இது குறித்து மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன், இந்த ஆண்டுக்கும் கடந்த ஆண்டிற்கும் இடையே ஒப்பிடும்போது போலி 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதைக் காட்டும் படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த காலகட்டத்தில் 2,000 ரூபாய் போலி நோட்டுகளின் எண்ணிக்கை சுமார் 54 சதவீதம் உயர்ந்துள்ளதாக அவர் பகிர்ந்துள்ள படத்தில் கூறப்பட்டுள்ளது.

பணமதிப்பு நீக்கம் ஞாபகம் இருக்கா
மேலும், இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வணக்கம் நரேந்திர மோடி.. பணமதிப்பு நீக்கம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அப்போதே மம்தா பானர்ஜி உங்களை விமர்சித்து இருந்தது ஞாபகம் இருக்கிறதா? பணமதிப்பு நீக்கம் நடவடிக்கை நாட்டில் உள்ள அனைத்து கள்ள நோட்டுகளையும் அழித்துவிடும் என்று நீங்கள் நாட்டுக்கு உறுதியளித்தீர்கள். ஆனால், கள்ள நோட்டுகள் பெரியளவில் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையின் காட்டுகிறதே!" என்று ட்வீட் செய்துள்ளார்.

ரிசரவ் வங்கி
ரிசரவ் வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், "முந்தைய ஆண்டு உடன் ஒப்பிடும் போது 10 ரூபாய் கள்ள நோட்டுகள் 16.4 சதவீதமும் 20 ரூபாய் கள்ள நோட்டுகள் 16.5 சதவீதமும், 200 ரூபாய் கள்ள நோட்டுகள் 11.7 சதவீதமும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 101.9 சதவீதமும் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் 54.6 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதேநேரம் 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் முறையே 28.7 சதவீதம் மற்றும் 16.7 சதவீதம் குறைந்துள்ளன" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பு நீக்கம்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தார். கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை உதவும் என்று அவர் தெரிவித்திருந்தார். அதேபோல டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்க்க இது உதவும் என்றும் பாஜகவினர் அப்போது தெரிவித்தனர். இருப்பினும், அந்த சமயத்திலேயே எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் இந்த நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்து இருந்தனர்.

மம்தா பானர்ஜி
அப்படி அந்த சமயத்தில் மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மிகக் கடுமையாக எதிர்த்தவர்களில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும் ஒருவர். பணமதிப்பு நீக்கம் தொடர்பான பிரதமரின் அறிவிப்பு "கொடூரமானது" என்று குறிப்பிட்ட அவர், அதைத் திரும்பப் பெறுமாறு அழைப்பு விடுத்தார். வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்க முடியாததால் அதைத் திசைதிருப்பவே இந்த நாடகம் என்றும் மம்தா அப்போதே சாடி இருந்தார்.












Click it and Unblock the Notifications